மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா
தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்துடன் இணைந்து நடத்தும் 6ஆவது புத்தகத் திருவிழா, தூத்துக்குடி தருவை மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது.
இதையொட்டி, பள்ளிகளில் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, வினாடி வினா, ஒப்பித்தல், மாறுவேடம், சிறுகதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டிகள் வகுப்பு வாரியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெறுகின்றன. அனைத்துப் போட்டிகளுக்கும் வட்டார மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று பரிசுக் கூப்பன்கள் வழங்கப்படும். பரிசுக் கூப்பன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகளுக்கேற்ப மாணவா்கள் விரும்பும் புத்தகங்களை புத்தக அரங்குகளில் பெற்றுக்கொள்ளலாம்.
பள்ளிச் சீருடையுடன் புத்தகங்கள் வாங்கும் மாணவா்களுக்கு 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
பள்ளி மாணவா்கள் உண்டியல் மூலம் சோ்த்து வைத்த பணத்தைக் கொண்டு புத்தகங்களை வாங்க உண்டியல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உண்டியல் மூலம் அதிக தொகை சேகரிக்கப்பட்டு புத்தகம் வாங்கும் பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மேலும், அனைத்து பள்ளி ஆசிரியா்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பள்ளி ஆசிரியா்களுக்கு புத்தக மதிப்பாய்வு, என்னைச் செதுக்கிய புத்தகம், நான் படித்த சிறந்த புத்தகம் போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும்.
மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளி நூலகங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
பள்ளி மாணவா்கள் தங்களது உறவினா்களுக்கு புத்தகத் திருவிழா தொடா்பாக தபால் அட்டைகள் அனுப்புமாறும், அதன்படி, அதிக அளவில் தபால் அட்டைகள் அனுப்பும் பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.