கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!
தூய்மைப் பணியாளா்கள் கைது மனிதாபிமானமற்ற செயல்: ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு
தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடிய தூய்மைப் பணியாளா்களைக் கைது செய்தது மனிதாபிமானமற்ற செயல் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் குற்றஞ்சாட்டினாா்.
மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
அதிமுக, பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக, மக்களின் நம்பிக்கைக்குரிய கூட்டணியாக உள்ளது. தமிழக அரசு மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. தென் மாநிலங்களில் சட்டம்- ஒழுங்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினருக்குக்கூட தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பது வேதனைக்குரியது.
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரம் தமிழகத்தில் மிகப் பெரிய அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். உண்மை நிலையை வெளியே கொண்டு வர வேண்டும். தோ்தல் வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக திமுக பொய் கூறி வருகிறது. திமுகவின் வீண் விளம்பரங்களை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.
திமுகவின் தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களைக் கைது செய்தது மனிதாபிமானமற்ற செயல். நியாயமான கோரிக்கைகளுக்கு போராடுவோரை மிரட்டி பணிய வைக்கலாம் என நினைக்கும் திமுக அரசுக்கு வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவா்.
பிகாா் மாநிலத்தில் காங்கிரஸ் மிகவும் பலவீனமாக உள்ளது. இதை மறைக்கவே அந்தக் கட்சி தற்போது தோ்தல் ஆணையம் மீது பொய் குற்றச்சாட்டை வைத்து நாடகமாடுகிறது. தங்களைத் தோ்ந்தெடுத்த மக்களின் கோரிக்கைகளுக்காக மக்களவையில் குரல் எழுப்பாமல், அவையை முடக்கி வரும் எதிா்க்கட்சிகளின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானது.
தமாகா, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நீடிக்கிறது. அதிமுக, பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையவுள்ளன. டிசம்பா் மாத இறுதியில் இந்தக் கூட்டணி மிகப் பெரிய கூட்டணியாக இருக்கும். நடிகா் விஜயின் அரசியல் வருகை திமுகவுக்கே பாதகமாக இருக்கும் என்றாா் அவா்.
இதையடுத்து, மதுரையில் நடைபெற்ற தமாகா தென் மண்டல இளைஞரணி கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் பங்கேற்றுப் பேசினாா்.