செய்திகள் :

தேர்தல் ஆணையம் நேர்மையற்றது என்றால் சட்டப் பேரவைகளை கலைத்துப் பாருங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சவால்

post image

தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது சந்தேகம் இருந்தால் தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைகளைக் கலைக்க "இண்டி' கூட்டணிக் கட்சிகள் தயாரா என்று பாஜக சவால் விடுத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, திமுக, ஆர்ஜேடி உள்ளிட்ட "இண்டி' கூட்டணியைச் சேர்ந்த 8 கட்சிகள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி விமர்சித்து வருகின்றன.

இது தொடர்பாக தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது செய்தியாளர் சந்திப்பில் பதில் கூறாமல் தங்களை அவர் விமர்சித்துள்ளதாக அக்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா, தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

"திருடன் - திருடன்' என்று கூச்சல் எழுப்புவது ராகுல் காந்தியின் வழக்கம். தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக அவர் விமர்சித்து வருகிறார். ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள ராகுல், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் போன்றவர்கள் தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் மீது திருட்டுப் பட்டம் சுமத்துவது முரணானது.

ராகுல் காந்தியைப் போன்ற எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பியுள்ள புகார்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் தனது செய்தியாளர் சந்திப்பில் விரிவாக பதிலளித்துள்ளார். ஆனால் சதி நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூச்சலிடுகின்றன.

இந்தியாவில் கலகம் போன்ற சூழல் உருவாகி தாங்கள் அரசியல் ரீதியாக ஆதாயம்பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. இதுவே அவர்களது முயற்சியாகும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம், அந்த நடவடிக்கைக்கு தடைவிதிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தை விட எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு அதிக அதிகாரம் படைத்ததா?

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கண்ணியக் குறைவான வார்த்தைகளை ராகுல் காந்தியும் அவரது கட்சியினரும் பயன்படுத்துகின்றனர். இது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் விரக்தியைக் காட்டுகிறது. எந்த விலை கொடுத்தாவது நேரு குடும்பம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது அவர்களின் ஒரே இலக்கு.

கடந்த மக்களவைத் தேர்தல் தவறான வாக்காளர் பட்டியல்களின் அடிப்படையில் நடத்தப்பட்டதால் மக்களவையைக் கலைக்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பியுள்ள கோரிக்கையை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா வழிமொழிந்துள்ளார்.

இதே தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தல்களில் வென்றுதான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 2011 முதல் முதல்வராக இருக்கிறார். அவர் மேற்கு வங்க சட்டப் பேரவையைக் கலைப்பாரா? அதேபோன்று தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது சந்தேகம் இருந்தால் தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைகளைக் கலைக்க இந்தியா கூட்டணிக் கட்சிகள் தயாரா?

பிகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.

சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களைக் காக்கவும் அவர்களின் வாக்குகளைப் பெற்று தேர்தல்களில் வெற்றி பெறுவதுமே இந்தக் கட்சிகளின் நோக்கம் என்று சம்பித் பாத்ரா தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது அமளி: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள வீரர் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பாஜக மூத்த தலைவரும், ம... மேலும் பார்க்க

வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிக்கிறோம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

நமது நிருபர்வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிப்பதாக டாஸ்மாக் வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோட... மேலும் பார்க்க

குவாஹாட்டியில் புதிய ஐஐஎம்: மக்களவையில் மசோதா அறிமுகம்

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (ஐஐஎம்) அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா 2025’ என்ற பெயரிலா... மேலும் பார்க்க

ஜன் தன் கணக்குகளில் 23% செயலற்றவை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டமான பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளில் 23 சதவீத கணக்குகள் தற்போது எந்த பரிவரிவா்த்தையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவைய... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப் போட்ட பலத்தமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து ஸ்தம்பித்தது

மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரில் கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, தாணே, ராய்கட் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய ... மேலும் பார்க்க