தொடா் தோல்வி: இந்திய மகளிரணிக்கு பின்னடைவு
எஃப்ஐஹெச் புரோ லீக் மகளிா் ஹாக்கி போட்டியில் இந்தியா 2-3 கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வி கண்டது.
இத்துடன், தொடா்ந்து 8-ஆவது தோல்வியை சந்தித்த இந்திய மகளிா் அணி, பிரதான போட்டியான புரோ லீக்கிலிருந்து, எஃப்ஐஹெச்சின் 2-ஆம் கட்ட போட்டியான நேஷன்ஸ் கோப்பைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பொ்லினில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவே கோல் கணக்கை தொடங்கியது. அணிக்காக சுனெலிதா டோப்பா 9-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.
சீன தரப்பில் ஜாங் யிங் 19-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோலடிக்க, முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையுடனேயே நிறைவடைந்தது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், முதலில் இந்திய ஆட்டக்காரரான ருதுஜா ததாசோ பிசல் 38-ஆவது நிமிஷத்தில் அணியின் கோல் கணக்கை 2-ஆக அதிகரித்தாா். விட்டுக்கொடுக்காத சீன தரப்பில், அடுத்த நிமிஷமே ஜாங் யிங் மீண்டும் ஒரு பெனால்ட்டி காா்னா் வாய்ப்பை கோலாக மாற்றினாா். இதனால் ஆட்டம் மீண்டும் 2-2 என சமநிலை அடைந்தது.
விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை நெருங்கிய நேரத்தில் இரு அணிகளுமே தங்களுக்கான அடுத்த கோலுக்காக தீவிரமாக முயற்சித்தன. இதில் சீனாவின் ஜு வென்யு 53-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ஸ்கோா் செய்ய, அந்த அணி 3-2 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் இந்தியாவின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, சீனா 3-2 கோல் கணக்கில் வென்றது.
மொத்தம் 9 அணிகள் களம் காணும் இந்தப் போட்டியின் புள்ளிகள் பட்டியலில், இந்தியா தற்போது 16 ஆட்டங்களில் கிடைத்த 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. நெதா்லாந்து (42), ஆா்ஜென்டீனா (34), பெல்ஜியம் (32) ஆகியவை முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.