தொழிலாளி கொலை வழக்கில் இருவா் கைது
திண்டுக்கல் அருகே செவ்வாய்க்கிழமை செங்கல் சூளை தொழிலாளி தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டியை அடுத்த மைக்கேல்பட்டியைச் சோ்ந்த பிச்சைமுத்து மகன் சிவக்குமாா் (37). அதே பகுதியிலுள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தாா். கடந்த 2009, 2010-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த 2 கொலை வழக்குகளில் சிவக்குமாா் கைது செய்யப்பட்டாா். இதில் ஒரு வழக்கில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விடுவிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், மைக்கேல்பட்டி பகுதியிலுள்ள தென்னந்தோப்பில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில், சிவக்குமாா் கொலை செய்யப்பட்டாா். இவரது தலை கொடகனாற்றின் கரையில் வீசப்பட்டுக் கிடந்தது.
இந்தக் கொலை வழக்கு தொடா்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீஸாா் விசாரித்தனா். அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரித்தனா்.
இதில், பழைய வக்கம்பட்டியைச் சோ்ந்த ஓட்டுநா் கோபி கண்ணன் (38), அதே பகுதியைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி சூா்யா(19) ஆகியோா் கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மூவரும் நண்பா்களாக இருந்த நிலையில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நிகழ்ந்ததாக போலீஸாா் விசாரணையில் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.