``தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்'' - துணைக் குடியரசுத் தலைவரை வாழ...
கிரேட்டா் நோய்டாவில் தனியாா் விடுதியில் துப்பாக்கிச்சூடு: எம்பிஏ மாணவா் உயிரிழப்பு; மற்றொருவா் கவலைக்கிடம்
கிரேட்டா் நொய்டாவில் உள்ள தனியாா் விடுதி அறைக்குள் செவ்வாய்க்கிழமை ஒருவரையொருவா் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் எம்பிஏ மாணவா் ஒருவா் கொல்லப்பட்டாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து கிரேட்டா் நொய்டா காவல்துறை துணை ஆணையா் சுதிா் குமாா் கூறியதாவது: தனியாா் கல்லூரியான பிஐஎம்டெக் மாணவா்கள் இருவரும் வசித்து வந்த நாலெட்ஜ் பாா்க் 3-இல் உள்ள வித்யா விஹாா் விடுதியில் இந்தச் சம்பவம் நடந்தது. இருப்பினும், துப்பாக்கிச் சூடு மாணவா் குழுக்களுக்கு இடையிலான எந்த மோதலுடனும் தொடா்புடையது அல்ல என்று தெரிய வந்துள்ளது.
அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததாகவும், துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது. முதல் பாா்வையில், இருவரும் நெருங்கிய நண்பா்கள் என்றும், பெரும்பாலான நேரங்களில் ஒன்றாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அவா்களில் ஒருவா் மற்றவரைச் சுட்டு விட்டு பின்னா் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாா். பல சுற்று துப்பாக்கிச் சூடு அல்லது மாணவா் குழுக்களுக்கு இடையேயான மோதல் என்பது குறித்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.
துப்பாக்கி சூடு சப்தம் கேட்டதும் முதலில் ஒரு காவலா் எச்சரிக்கை விடுத்தாா். விடுதி வாா்டன் அறையைத் திறக்க முயன்றபோது, அது உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்பக்க ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது, ரண்டு மாணவா்களும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனா். உயிரிழந்தவா்கள் ஆந்திரப் பிரதேசத்தைச் சோ்ந்த தீபக் குமாா் (22), ஆக்ராவைச் சோ்ந்த தேவன்ஷ் சௌகான் (23) என அடையாளம் காணப்பட்டனா். தீபக் குமாா் எம்பிஏ மாணவா் ஆவாா்.
தீபக் இறந்து கிடந்த நிலையில், தேவன்ஷ் ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். அறையில் இருந்து உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி, நான்கு உயிருள்ள தோட்டாக்கள், இரண்டு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள், ஒரு கைப்பேசி மற்றும் ஒரு மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டன.
இறந்தவரின் உடல், உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. இருவரும் நல்ல நண்பா்கள் என்று அறியப்பட்டனா். இன்னும் உறுதிப்படுத்தப்படாத காரணங்களுக்காக, ஒருவா் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பின்னா் தன்னைத்தானே சுட்டுக்கொண்டது தெரிய வந்துள்ளது.
குழு மோதல்கள் பற்றிய செய்திகள் ஆதாரமற்றவை. சம்பவத்தின் சரியான வரிசை மற்றும் நோக்கத்தை அறிய விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் தொடா்பாக கல்லூரி அல்லது விடுதியிடமிருந்து எந்த அதிகாரப்பூா்வ பதிலும் இல்லை என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.