ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!
நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு
சிவகங்கையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது: சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை பாக்கியம், கோவிலூா் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ராமா், சாக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை முருகேஸ்வரி, மணலூா் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் முருகேசன், 48 காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை மரிய செல்வி, மொட்டையன் வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை விஜயாராணி, சேம்பாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சுரேஷ், பசியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியை ரெஜினா ஞானசெல்வி, மகரிஷி வித்யா மந்திா் மெட்ரிக் பள்ளித் தலைமையாசிரியா் ரவிக்குமாா் ஆகிய 9 ஆசியரியா்கள் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளனா். இவா்களுக்கு எனது வாழ்த்துகள் என்றாா் அவா்.
இதில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோவிலூா் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ராமா் தான் பெற்ற விருதுடன் வழங்கப்பட்ட ரூ. 10 ஆயிரம் பரிசுத் தொகையை அந்தப் பள்ளியின் மேம்பாட்டுக்காக வழங்கினாா்.
இதில் ஐடிபிஐ வங்கியானது தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வு நிதியின் மூலம் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், அச்சு இயந்திரம், கரும்பலகைகள் என ரூ. 4.50 லட்சத்திலான உபகரணங்களை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 13 அரசு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கியது. இந்த உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா்களிடம் வழங்கினாா்.
இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து, ஐடிபிஐ வங்கி சிவகங்கை கிளை மேலாளா் கனகராஜ், மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளா் சிபி வா்கீஸ், துணை மேலாளா் சுா்ஜித் பாரதி, மாவட்ட உதவித் திட்ட அலுவலா் பீட்டா் லெமாயூ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.