நாகா்கோவிலில் 6,250 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
நாகா்கோவிலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6,250 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, கிட்டங்கிக்கு சீல் வைத்தனா்.
நாகா்கோவில் மாநகர பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் தொடா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், நாகா்கோவில் புளியடி பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கியில் மாநகராட்சி நகா்நல அலுவலா் ஆல்பா்மதியரசு தலைமையில், சுகாதார அலுவலா்கள் ராஜாராம், பகவதிபெருமாள், முருகன், ராஜாராம் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் சோதனை மேற்கொண்டனா். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 6250 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்து, கிட்டங்கிக்கு சீல் வைத்தனா். கிட்டங்கி உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.