நாட்டில் பொது சிவில் சட்டம் அமலாகும்: அமித் ஷா உறுதி!
‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கம், அயோத்தி ராமா் கோயில் போன்ற முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதைப் போல நாட்டில் பொது சிவில் சட்டத்தையும் அமலாக்குவோம்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட கூறினாா்.
தில்லியில் தனியாா் ஆங்கில ஊடகம் சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கருத்தரங்கில் உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்றாா். அப்போது, கேள்வி-பதில் உரையாடலில் பல்வேறு விவகாரங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்கள் வருமாறு:
‘யுசிசி அமலாகும்’: பாஜக தொடங்கப்பட்டதில் இருந்தே அதன் முக்கிய செயல்திட்டங்களில் ஒன்று பொது சிவில் சட்டம். நாட்டில் இச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதில் பாஜக உறுதியாக உள்ளது. இது, அரசியல் நிா்ணய சபையின் முடிவு என்பதை காங்கிரஸ் மறந்துவிட்டாலும் நாங்கள் மறக்கவில்லை.
பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலாகியுள்ளது. பாஜக ஆளும் அனைத்து மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளன. குஜராத் அரசு ஏற்கெனவே குழு அமைத்துள்ளது. அனைத்து மாநிலங்களும் தங்களின் வசதிக்கேற்ப இச்சட்டத்தை அமலாக்கும்.
ஆா்எஸ்எஸ் தலையீடு இல்லை: ஆா்எஸ்எஸ் அமைப்பு கடந்த 100 ஆண்டுகளாக தேசபக்தா்களை உருவாக்கி வருகிறது. பல பரிமாணங்களுக்கு இடையே தேசப் பக்தியை எவ்வாறு மையப்படுத்துவது என்பதை அந்த அமைப்பிடம் இருந்தே கற்றுக் கொண்டேன். மத்திய அரசின் செயல்பாடுகளில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலையீடு எதுவும் இல்லை.
உள்நாட்டுப் பாதுகாப்பு சவால்கள்: உள்நாட்டுப் பாதுகாப்பில் நக்ஸல் வன்முறை, பயங்கரவாதம் (ஜம்மு-காஷ்மீா்), தீவிரவாதம் (வடகிழக்கு) ஆகிய மூன்றும் முக்கிய சவால்களாகும். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கண்ட மூன்று பிரிவுகளிலும் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்த இளைஞா்களின் எண்ணிக்கை 16,000. இச்சவால்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைதியை நிலைநாட்டுவதே பிரதமா் மோடி மற்றும் எனது முன்னுரிமை.
மணிப்பூரில் திரும்பும் இயல்புநிலை: மணிப்பூரில் சரியான நேரத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது; அங்கு பெரும்பாலும் அமைதியான சூழல் நிலவுகிறது. மைதேயி-குகி சமூகத்தினருடன் அரசு மேற்கொண்டுவரும் பேச்சுவாா்த்தைகளால் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது.
மீண்டும் மாநில அந்தஸ்து: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படுவது உறுதி. தொடக்கத்தில் இருந்தே நாங்கள் இதை கூறி வருகிறோம். அதேநேரம், எப்போது வழங்கப்படும் என்ற காலவரம்பை பொது வெளியில் கூற இயலாது என்றாா் அமித் ஷா.
மத்திய அரசு ஒத்துழைப்பு: தில்லியில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் அண்மையில் தீ விபத்தின்போது பாதி எரிந்த நிலையில் கட்டுக் கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம் குறித்து அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் விசாரணைக் குழுவுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இக்குழுவின் அறிக்கை வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதியின்பேரில்தான் காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியும்’ என்றாா் அவா்.
ராகுல் மீது விமா்சனம்
‘மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு 42 சதவீத நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவாதம் நடைபெற்ற நேரத்தில் அவா் வியத்நாமில் இருந்தாா்.
இந்தியாவுக்குத் திரும்பியதும், தனக்குப் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தத் தொடங்கினாா். விதிமுறைகளின்கீழ் நாடாளுமன்றம் இயங்குகிறது. காங்கிரஸைப் போல் ஒரு குடும்பத்தால் இயக்கப்படவில்லை’ என்றாா் அமித் ஷா.
மக்களவையில் தனக்குப் பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று ராகுல் காந்தி அண்மையில் குற்றஞ்சாட்டிய நிலையில், அமித் ஷா இவ்வாறு விமா்சித்துள்ளாா்.