நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43% தமிழ்நாடு பெற்றுள்ளது: துணை முதல்வர் உதயநிதி
கோவையில் அமையவுள்ள சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த தமிழக துணை முதல்வர் உதயநிதி, மகளிருக்கான திட்டங்களால் நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43% தமிழ்நாடு பெற்றுள்ளது என தெரிவித்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஏப் 27) கோயம்புத்தூர் மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி உள்பட ரூ.82.14 கோடி மதிப்பீட்டில் 132 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.29.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 54 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 25,024 பயனாளிகளுக்கு ரூ.239.41 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் ரூ.10.36 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள நாளொன்றுக்கு 2.0 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட தானியங்கி பன்னீர் ஆலை உள்பட பொதுப்பணித்துறை, கோயம்புத்தூர் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பேரூராட்சிகள் துறை, வேளாண்மை துறை ஆகிய துறைகளின் மூலம் மொத்தம் ரூ.29.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 54 முடிவுற்ற திட்டப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 586 பயனாளிகளுக்கு ரூ.18.16 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும், மகளிர் திட்டத்துறையின் கீழ் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2,240 மகளிருக்கு ரூ. 13.73 கோடிக்கான நலத்திட்ட உதவிகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் 533 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 4,910 நபர்களுக்கு நிலவரித் திட்ட பட்டாக்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2,772 நபர்களுக்கு இ – பட்டாக்களையும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 700 நபர்களுக்கு இ – பட்டாக்களையும், 690 நபர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகளையும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 3,220 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், தாட்கோ திட்டத்துறையின் கீழ் 3,418 பயனாளிகளுக்கு தூய்மைப் பணியாளர் நலவாரிய அட்டைகளையும், வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 4,162 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் என பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் மொத்தம் 25,024 பயனாளிகளுக்கு ரூ.239.41 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் வழங்கினார்.
எந்தாண்டும் இல்லாத வகையில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
இதனைத் தொடர்ந்து பேசிய துணை முதல்லவர் உதயநிதி ஸ்டாலின்,
கோவைக்கு எப்போது வந்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.திராவிட மாடல் அரசு என்றால் எல்லோருக்கும் எல்லாம் என்று அர்த்தம். இந்த அரசுக்கு பக்க பலமாய் உள்ள தாய்மார்கள் இங்கு அதிகளவு வந்துள்ளீர்கள்.மகளிருக்கான திட்டங்கள் வரவேற்பு பெற்றுள்ளது.
விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை ஆகியவை பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது. மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
இதை எல்லாம் நாங்கள் கடன் தொகையாக பார்க்கவில்லை, உங்கள் உழைப்பின் மீது வைத்திருக்கக் கூடிய நம்பிக்கைத் தொகையாக தான் பார்க்கிறோம். மகளிருக்கான திட்டங்களால் நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43% தமிழ்நாடு பெற்றுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் கவனத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்துவதால், இன்றைக்கு நாட்டிலேயே 9.69 சதவிகித வளர்ச்சியோடு தமிழ்நாடு அனைத்து மாநிலங்களையும் விட முதலிடத்தில் உள்ளது.
13,000 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் வேலை.இந்த அரசு என்றைக்கும் மக்களுக்கு பக்கபலமாக இருக்கும், நீங்களும் இந்த அரசுக்கு பக்கபலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என கூறினார்.