நீதி கிடைக்கும்வரை கவினின் உடலை வாங்க மாட்டோம்: பெற்றோர் திட்டவட்டம்
திருநெல்வேலியில் ஆணவப் படுகொலைச் சம்பவத்தில், சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி கிடைக்கும்வரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோர் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
திருநெல்வேலி, கேடிசி நகரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சகோதரியை காதலித்ததால் உதவி ஆய்வாளர்களின் மகன் வெறிச்செயலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொலை செய்த சுர்ஜித், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். உடலைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுர்ஜித்திடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் காதலிக்க மறுத்த நிலையிலும் தனது சகோதரியை கவின் வற்புறுத்தியதால் அவரை வெட்டிப் படுகொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனிடையே கவின் தாய் தமிழ்ச்செல்வி பெண்ணின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் கொலை செய்ய தூண்டியதாலேயே அவர்களது மகன் சுர்ஜித் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அளித்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர்கள் சரவண ராஜன், கிருஷ்ண குமாரி, அவர்களது மகன் சுர்ஜித் ஆகியோர் மீது 296 (b), 103 (1), 49bns r / w3(1), 3 (1) r), 3 (1) (S,), 3 (2) (V) of SC/St act ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணிடமும் காவல்துறை விசாரணையில் இறங்கியுள்ளது அவர் விசாரணையின் அடிப்படையில் ஜாதி ஆணவ படுகொலையா என்பது தெரியவரும்.
கவின் உடல் வைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பிணவறைக்கு அவரது உறவினர்கள் யாரும் தற்போது வரை வரவில்லை. அவர்கள், கவின் உடலை வாங்க மறுத்து தங்களது சொந்த ஊரில் போராட்டம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே உதவி ஆய்வாளர்கள் சரவணராஜன், மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதனை காவல்துறை உறுதிப்படுத்த மறுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தின் பின்னணி என்ன?
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயியான இவரது மனைவி செல்வி. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் கவின், 25 வயதான இவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கவின் அவரது தாய் செல்வி மற்றும் உறவினர்கள் திருநெல்வேலி கேடிசி நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு (வேதா மருத்துவமனை) சிகிச்சைக்காக வந்துள்ளனர்.
அடிக்கடி அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நிலையில் அதில் சித்த மருத்துவராக பணியாற்றும் தனது பள்ளித் தோழியான ஒரு பெண்ணுடன் கவினுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு பெண்ணின் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. நாளடைவில் கவின் அந்தப்பெண்ணை காதலித்ததாகவும், அவரையே திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் இன்று தனது தாய் மற்றும் உறவினர்களுடன் சிகிச்சைக்காக அவர் திருநெல்வேலி மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் சகோதரரும் மணிமுத்தாறு பட்டாலியன் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் (சரவணகுமார் மற்றும் கிருஷ்ணவேணி ) ஆகியோரது மகனுமான சுர்ஜித் தனது இரு சக்கர வாகனத்தில் கவினிடம் பேச வேண்டும் என்று கூறி அழைத்து வந்துள்ளார்.
கேடிசி நகர் அருகே அஷ்டலட்சுமி நகர் முதலாவது தெரு அருகே அம்பாள் மருத்துவமனை அருகே வந்தபோது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின் மீது சுர்ஜித் தாக்குதல் நடத்தியுள்ளார். முகம், கை, கால் என அனைத்து பகுதிகளிலும் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் ரத்த வெள்ளத்தில் (அம்பாள் கிளினிக் முன்பு) அவர் சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அரிவாளால் தாக்குதல் நடத்திய சுர்ஜித் அங்கிருந்து தப்பி ஓடி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து காவலர்கள், கவின் உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சகோதரியை, மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவன் காதலித்தது பிடிக்காத நிலையில் உதவி ஆய்வாளர்களின் மகன் சுர்ஜித் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.