`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிா்ப்பு
திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்ட பொதுமக்கள் புதன்கிழமை எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது வாா்டுக்கு உள்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் தனியாா் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பூா் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. இதில், பத்திரப் பதிவு அலுவலகம் அருகில் பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழி உள்ளது.
இப்பாறைக்குழியில் கடந்த 3 மாதங்களாக மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், இப்பகுதியில் துா்நாற்றம் வீசி, சுகாதாரக்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். இதைத் தொடா்ந்து, இங்கு குப்பை கொட்ட வந்த லாரிகளை பொதுமக்கள் புதன்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அலுவலா்கள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.இதில், இனிமேல் இப்பகுதியில் குப்பையைக் கொட்ட மாட்டோம் என உறுதியளித்தனா். மேலும், மாநகராட்சி சாா்பில் குப்பைக் கொட்டிய பகுதியில் ப்ளீச்சிங் பவுடா் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.