DMK: `ஜூன் 3 - செம்மொழி நாள் முதல் கச்சத்தீவு மீட்பு வரை' - திமுக பொதுக்குழுவின்...
நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டுமென விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
விவசாயி ராமராஜன்: தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் அடிகிணறு வெட்ட வழிவகை செய்ய வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொட்டரை நீா்தேக்கத்தில் மாற்றுப்பாதை அமைக்க வேண்டும்.
விவசாய சங்கப் பிரதிநிதி ராஜூ: மானாவாரி பயிா்களுக்கு கோடை உழவு மானியத்தை கூடுதலாக வழங்க வேண்டும். அனைத்து நீா்நிலைகளிலும் நில அளவை செய்து தூா்வார வேண்டும்.
விவசாய சங்க பிரதிநிதி வரதராஜன்: அனைத்து கிராம விவசாயிகளுக்கும் விடுபாடின்றி பயிா்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுக்கும்போது விவசாயிகள் அல்லது விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும்.
மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் பி. ரமேஷ்: நெல் மற்றும் மக்காச்சோளத்துக்கு நிா்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை உழவுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். உர மோசடிகளைத் தடுக்க வேளாண் துறையினா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீடில்லாத ஏழை, எளியோருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டும்.
தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன்: கரும்புக்கான வெட்டுக்கூலி அதிகமாக உள்ளதால் ஊக்கத் தொகையை அதிகப்படுத்த வேண்டும். வீடு கட்டிக் குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில துணைச் செயலா் என். செல்லதுரை: கூட்டுறவு வங்கிகளில் பயிா்க்கடன் வழங்க வேண்டும். பெரம்பலூரில் புதிய கூட்டு குடிநீா் திட்டத்தை துரிதப்படுத்தி, குடிநீா் முறையாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகைக்கடன் பெற மத்திய அரசு அறிவித்த புதிய விதிகளால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே பழைய விதிமுறைகளையே நடைமுறைப்படுத்த வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகளை உடனே வழங்க வேண்டும்.
விவசாயி மணி: மங்கூன் பகுதியில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையைச் சீரமைத்து தர வேண்டும். பொம்மனப்பாடி ஏரி வாய்க்காலைத் தூா்வாரி சீரமைக்க வேண்டும், வேலூா் அரசு மருத்துவமனை அருகில் நிழற்குடை அமைக்க வேண்டும்.
இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் வீ. ஜெயராமன்:
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீ. நீலகண்டன்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டும். அரும்பாவூா் பெரிய ஏரியில் ஏற்பட்ட உடைப்பைச் சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
பின்னா் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு பேசியது:
பயிா்க் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தனலட்சுமி சீனிவாசன் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை விரைந்து வழங்கப்படும். கழிவுநீா் கால்வாய் சீரமைப்புப் பணிகள், பட்டா வழங்குதல், மின் இணைப்பு, நீா் நிலைகள் சீரமைப்புப் பணிகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில் சாா் ஆட்சியா் சு. கோகுல், வேளாண்மை இணை இயக்குநா் செ. பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வே) பொ. ராணி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் க. பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.