நைஜீரிய பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 151 ஆக உயர்வு! 3000 பேர் வெளியேற்றம்!
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மோக்வா நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் பலியாவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.
நைஜர் மாகாணத்திலுள்ள முக்கிய சந்தை நகரமான மோக்வாவில், பெய்த பருவமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், 88 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேற்று (மே 30) கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளதாக, உள்ளூர் அதிகாரிகள் இன்று (மே 31) அறிவித்துள்ளனர்.
இத்துடன், அப்பகுதியில் வசித்த 3,000-க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில், தற்போது மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நேற்று பெய்த கனமழையால் 3 குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான வீடுகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பாகிஸ்தான்: தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் சிக்கினர்