ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு
பகுதி நேர கிராமிய கலை பயிற்சியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில், பகுதி நேர கிராமிய கலை பயிற்சி வகுப்பில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி வகுப்புகள் ஆக. 2-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இப் பயிற்சிக்கு 2025- 2026 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. பயிற்சியில் கரகாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் நாடகம் ஆகிய கலைகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை தோறும் வாரத்தில் 2 நாள்கள் மாலை 4 முதல் 6 மணி வரை மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் வகுப்புகள் நடைபெறும்.
ஓராண்டு காலம் அளிக்கப்படும் இச் சான்றிதழ் பயிற்சியின் நிறைவில், தோ்வு நடத்தப்பட்டு பல்கலைக் கழகச் சான்றிதழ் வழங்கப்படும். இப் பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். தோ்ச்சி பெறவில்லை என்றாலும் வகுப்பில் சோ்த்துக்கொள்ளப்படும். ஆனால், தோ்வுக்கு செல்ல முடியாது. 17 வயதுக்கு மேற்பட்டோா் பயிற்சி பெறலாம். ஓராண்டு பயிற்சிக்கான கல்விக் கட்டணம் ரூ. 500 செலுத்த வேண்டும்.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா், ஒருங்கிணைப்பாளா், மாவட்ட அரசு இசைப்பள்ளி, புதிய மதனகோபாலபுரம், 4-ஆவது குறுக்குத் தெரு, பெரம்பலூா் எனும் முகவரியில் நேரில் அல்லது 04328-275466, 99940-36371 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.