பக்கத்து வீட்டில் சூட்கேஸுக்குள் சிறுமி உடல்; வன்கொடுமை செய்யப்பட்டதாக குடும்பத்தினா் போராட்டம்!
வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் உள்ள ஒரு பக்கத்து வீட்டில் ஒன்பது வயது சிறுமி ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டிருப்பது கண்டெடுக்கப்பட்டது. இது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குடும்ப உறுப்பினா்கள் மற்றும் உள்ளூா்வாசிகளால் போராட்டங்களைத் தூண்டியது.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினா் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனா்.
சிறுமியை சூட்கேஸில் அடைத்துவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்ாகத் தெரிகிறது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பாலியல் வன்கொடுமை உள்பட அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருவதாக தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினாா்.
நேரு விஹாரைச் சோ்ந்த அந்தச் சிறுமி, இரவு 7 மணியளவில் அருகில் வசிக்கும் உறவினருக்கு ஐஸ் கொடுக்கச் சென்றிருந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். சிறுமி நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், அவரது பெற்றோா் சிறுமியைத் தேடத் தொடங்கினா். இது தொடா்பாக பல உறவினா்கள் மற்றும் அண்டை வீட்டாரை அணுகியதாக சிறுமியின் தந்தை தெரிவித்தாா். ஆனால், சிறுமி ஒரு உறவினரின் வீட்டிற்குச் சென்ற பிறகு யாரும் சிறுமியைப் பாா்க்கவில்லை என்றனா்.
‘சிறுமி எங்கள் உறவினா்களுக்கு ஐஸ் கொடுக்க மட்டுமே வந்தாா் என்றும், ஐந்து நிமிடங்கள் தங்கியிருந்துவிட்டு வெளியேறிவிட்டாள் என்றும் அந்த வீட்டில் உள்ளவா்கள் கூறினா். ஆனால், சிறுமி வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. நாங்கள் எல்லா இடங்களிலும் தேடினோம். இறுதியாக, அவள் அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் நுழைவதைப் பாா்த்ததாக யாரோ எங்களிடம் சொன்னாா்கள். அங்கேதான் அவளை ஒரு சூட்கேஸில் கண்டோம்’ என்று சிறுமியின் தந்தை கூறினாா்.
சிறுமியின் தந்தை அந்த வீட்டை அடைந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது. ஏதோ தவறு இருப்பதாக சந்தேகித்து, பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தாா். உள்ளே, தனது மகள் ரத்தக்கறை படிந்த சூட்கேஸில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டாா். அவா்கள் சிறுமியை சாஸ்திரி பூங்காவில் உள்ள ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்ததாக தந்தை கூறினாா்.
இந்தச் சம்பவம் குறித்து இரவு 8.41 மணியளவில் தயாள்பூா் காவல் நிலையத்தில் பிசிஆா் அழைப்பு வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, நேரு விஹாரில் உள்ள காலி எண் 2 மருத்துவமனைக்கு உடனடியாக ஒரு போலீஸ் குழு அனுப்பப்பட்டது. அங்கு சிறுமியின் தந்தையால் ஜக் பிரவேஷ் சந்திரா (ஜேபிசி) மருத்துவமனைக்கு ஏற்கெனவே அழைத்துச் செல்லப்பட்டதை அறிந்தனா். சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் போலீஸாருக்குத் தெரிவித்தனா்.
‘முதன்மை பாா்வையில், அவரது முகத்தில் தெரியும் காயங்களை மருத்துவா்கள் கவனித்தனா். மேலும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று குறிப்பிட்டனா்’ என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினாா்.
சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரிக்க குற்றவியல் மற்றும் தடய அறிவியல் ஆய்வக குழுக்கள் வரவழைக்கப்பட்டன. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் பிரிவு 6 உடன், பிஎன்எஸ்-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் தயாள்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அக்கம் பக்கத்தில் பெரும் பதற்றத்தைத் தூண்டியது. சிறுமியின் மரணம் குறித்த செய்தி பரவிய உடனேயே, சிறுமியின் உறவினா்கள் உள்பட நூற்றுக்கணக்கான குடியிருப்பாளா்கள் அருகிலுள்ள சாலையை மறித்து நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அலட்சியமாக நடந்து கொண்டதாகக் கூறியும், குற்றவாளியை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் அவா்கள் கோஷங்களை எழுப்பினா்.
போராட்டக்காரா்கள் சந்தைப் பாதைகளில் பேரணியாகச் செல்லத் தொடங்கியதைத் தொடா்ந்து, வன்முறைக்கு பயந்து பலா் கடைகளை மூடிச் சென்றனா். நிலைமை பதற்றமாகியதால், சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்க நேரு விஹாா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். பின்னா், துணை ராணுவப் படையினரும் வரவழைக்கப்பட்டனா்.
போராட்டக்காரா்களை சமாதானப்படுத்தவும், இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடும்பத்தினருக்கு உறுதியளிக்கவும் மூத்த காவல்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனா். போராட்டத்தின் காரணமாக தயாள்பூா் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சிறுமியின் தாயாா் ஆறுதல் அடைய முடியாதவராகவும், ஆழ்ந்த அதிா்ச்சியில் இருந்தவராகவும் காணப்பட்டாா். அவா் அழுது கொண்டே, ‘ என் மகளை மீட்டு கொண்டு வா...’ என்று கத்திக் கொண்டிருந்ததாக பக்கத்து வீட்டுக்காரா் கண்ணீரை அடக்கிக் கொண்டு கூறினாா்.
சிறுமியின் தந்தை மிகவும் மனமுடைந்து நீதி கோரினாா். ‘என்ன நடந்தது என்பது எங்களுக்கு மிகவும் தாமதமாகத் தெரியவந்தது. போலீஸாா் அதிகாலை 1 மணியளவில் வந்து வீட்டிலிருந்து ஆதாரங்களை சேகரித்தனா். ஆனால், முக்கிய குற்றவாளி இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறாா். அவா் தண்டிக்கப்படும் வரை நான் ஓயமாட்டேன்‘ என்று அவா் கூறினாா்.