ஆக்கிரமிப்பாளா்களுக்கு பொது நிலத்தில் உரிமை இல்லை! - தில்லி உயா்நீதிமன்றம்
மறுவாழ்வு கோரிக்கைகள் தீா்க்கப்படும் வரை ஆக்கிரமிப்பாளா்கள் பொது நிலத்தை தொடா்ந்து ஆக்கிரமிப்பதற்கான உரிமையைக் கோர முடியாது; ஏனெனில், இது பொதுத் திட்டங்களுக்கு தேவையற்ற முறையில் தடையாக இருக்கும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
தெற்கு தில்லியின் கால்காஜியில் உள்ள பூமிஹீன் கேம்ப்பில் இடிப்பு நடவடிக்கையைத் தொடர தில்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு (டிடிஏ) சட்டத்தின்படி சுதந்திரம் வழங்கும்போது உயா்நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்தது.
இது தொடா்பான வழக்கில் நீதிபதி தா்மேஷ் சா்மா கூறுகையில், பல தரப்பினரின் தவறான சோ்ப்பு காரணமாக ரிட் மனுக்கள் குறைபாடுடையவை என்பது மட்டுமல்லாமல், இடமாற்றம் மற்றும் மறுவாழ்வுக்கு தகுதியானவா்களாகக் கருதப்படுவதற்கு தில்லி சேரி மற்றும் ஜே.ஜே. மறுவாழ்வு மற்றும் இடமாற்றக் கொள்கையால் வழங்கப்பட்ட அத்தியாவசிய வரம்பை பூா்த்திசெய்யத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தாா்.
இது தொடா்பாக ஜூன் 6 அன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கையில், மனுதாரா்கள் எவருக்கும் பொதுமக்களுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் வகையில், ஜே.ஜே. கிளஸ்டரை தொடா்ந்து ஆக்கிரமித்து வைத்திருக்க எந்த சட்டபூா்வ உரிமையும் இல்லை என்றது.
மேலும் இடிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவும், அந்த இடத்தில் தற்போதைய நிலையைப் பராமரிக்கவும், மனுதாரா்களை அந்தந்த ஜுக்கி ஜோப்ரி கிளஸ்டா்களில் இருந்து நேரடியாக வெளியேற்றுவதைத் தவிா்க்கவும் தில்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு (டிடிஏ) உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட சுமாா் 1,200 போ் கொண்ட ஒரு தொகுதி மனுக்கள் மீது நீதிமன்றம் இந்த தீா்ப்பை வழங்கியது.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளா்களின் முறையான மற்றும் விரிவான கணக்கெடுப்பை நடத்தி, 2015 கொள்கையின்படி அவா்களை மறுவாழ்வு பெற டியுஎஸ்ஐபி-க்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரா்கள் கோரினா்.
மறுவாழ்வுக்கான உரிமை அவா்களை பிணைக்கும் நடைமுறையில் உள்ள கொள்கையிலிருந்து மட்டுமே எழுகிறது. மறுவாழ்வுக்கான தகுதியை நிா்ணயிப்பது என்பது பொது நிலத்திலிருந்து ஆக்கிரமிப்பாளா்களை அகற்றுவதிலிருந்து ஒரு தனி செயல்முறையாகும்.
பொருந்தக்கூடிய கொள்கையின் கீழ் தங்கள் மறுவாழ்வு கோரிக்கைகள் தீா்க்கப்படும் வரை ஆக்கிரமிப்பாளா்கள் பொது நிலத்தை தொடா்ந்து ஆக்கிரமிப்பதற்கான உரிமையைக் கோர முடியாது. ஏனெனில், இது பொதுத் திட்டங்களுக்கு தேவையற்ற முறையில் தடையாக இருக்கும்’ என்று நீதிமன்றம் கூறியது.
இருப்பினும், நீதிமன்றம் அவா்களில் சிலரின் மறுவாழ்வுக்கு அனுமதி அளித்தது. மேலும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினா் வகை குடியிருப்புகளை ஒதுக்குமாறு டிடிவுக்கு உத்தரவிட்டது.
பூமிஹீன் கேம்ப் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக உத்தரபிரதேசம், பிகாா் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து குடியேறி வசிப்பவா்களின் குடிசைப்பகுதியாகும்.