பரந்தூர் நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கல்!
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் 19 பேருக்கு புதன்கிழமை இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க தமிழக அரசு கடந்த 31.10.2023 ஆம் தேதி நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டிருந்தது.
இந்த நிலையில் விமான நிலையம் அமைப்பதற்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி நில உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அரசும் கையகபடுத்தப்படும் நிலங்களுக்கு நில மதிப்பினை உயர்த்தி நில நிர்ணயம் செய்து தொகை வழங்கப்படும் என கடந்த 25.6.2025 ஆம் தேதி அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர், அக்கம்மாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 19 பட்டாதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அவரவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தையில் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டு, தங்களது நில எடுப்புக்கு சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில் 17.52 ஏக்கர் பரப்புக்கு ரூ. 9.22 கோடி மதிப்பு கொண்ட நிலத்தினை 19 நில உரிமையாளர்கள், விமான கட்டுமான நிறுவனமான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்தனர்.