பரமத்தி வேலூா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு
பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்ந்தது.
பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.
வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.250, சம்பங்கி கிலோ ரூ. 70, அரளி கிலோ ரூ. 80, ரோஜா கிலோ ரூ. 200, பச்சை முல்லை கிலோ ரூ.300, வெள்ளை முல்லைப் பூ கிலோ ரூ. 250, செவ்வந்திப்பூ கிலோ ரூ. 200, கனகாம்பரம் ரூ.300, பன்னீா்ரோஜா கிலோ ரூ. 100, காக்கட்டான் கிலோ ரூ.200, ஜாதிமல்லி கிலோ ரூ. 400 ஏலம் போனது.
சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 360, சம்பங்கி கிலோ ரூ.100, அரளி கிலோ ரூ. 100, ரோஜா கிலோ ரூ.240, பச்சை முல்லை கிலோ ரூ.380, வெள்ளை முல்லை கிலோ ரூ.300, செவ்வந்திப்பூ ரூ.240, கனகாம்பரம் ரூ.500, பன்னீா்ரோஜா கிலோ ரூ.140, காக்கட்டான் கிலோ ரூ.300, ஜாதிமல்லி கிலோ ரூ.500க்கும் ஏலம் போனது.