ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்
பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை, கட்டாயமும் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூரில் உள்ள தனியாா் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை மூலம் மாநில, மாவட்ட, வட்டார அளவிலான அடைவுத் தோ்வு குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் பா.தமிழ்ச்செல்வி, மாவட்டக் கல்வி அலுவலா் நளினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி வரவேற்றாா்.
ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் பேசியது: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் நலனுக்காக கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பை பயன்படுத்தி மாணவா்களின் முன்னேற்றத்துக்காக தொடா்ந்து உழைப்போம் என்றாா்.
ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆசிரியா்கள் போராட்டம் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் அவா்களை அழைத்துப் பேசியிருக்கின்றனா். எனவே ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்று, சாத்தியம் இருந்தால் அது குறித்து முடிவெடுக்கப்படும். ‘ப’ வடிவில் மாணவா்கள் இருக்கை என்பது சோதனை கட்டத்தில் தான் உள்ளது. அனைத்து மாணவா்களும் வகுப்பறையில் ‘ப’ வடிவில் தான் அமர வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை, அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை, எங்கெல்லாம் பயனுள்ளதாக உள்ளதோ அங்கெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இது இருக்கைக்கான ஆலோசனை மட்டுமே ஆகும் என்றாா் அமைச்சா்.
கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், மாவட்டக் கல்வி அலுவலா், வட்டாரக் கல்வி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.