பழங்குடி இருளா் சிறுமி இறப்பு: போக்ஸோ சட்டத்தில் தாத்தா கைது
வந்தவாசி: வந்தவாசி அருகே 6 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட பழங்குடி இருளா் சிறுமியின் சடலம் அண்மையில் தோண்டியெடுக்கப்பட்டு உடல்கூறு ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அந்தச் சிறுமி இறப்பு தொடா்பாக அவரது தாத்தாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த மூடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அமரேசன் மனைவி அஞ்சலி. இவரது மகள் துா்கா (14)
அமுடூா் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தாா்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அமரேசன் இறந்து விட்டதால் அஞ்சலி படூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை என்பவரை 2-ஆவது திருமணம் செய்து கொண்டாா்.
இதனால் துா்கா, எரமலூா் கிராமத்தில் உள்ள கோழிப் பண்ணையில் தங்கி வேலை செய்து வந்த அஞ்சலியின் தந்தை ஜெயராமனுடன் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தாராம்.
இந்த நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு அக். 14-ஆம் தேதி துா்கா விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டு விட்டதாகக் கூறி, அவரது சடலத்தை பெற்றோா் மற்றும் உறவினா்கள் மூடூா் கிராம சித்தேரியில் அடக்கம் செய்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சிறுமி துா்காவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மூடூா் கிராம நிா்வாக அலுவலா் செல்வகணபதி தெள்ளாா் போலீஸில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து வந்தவாசி வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி, டிஎஸ்பி தீபக் ரஜினி மற்றும் தெள்ளாா் போலீஸாா் முன்னிலையில், மூடூா் கிராம சித்தேரியில் புதைக்கப்பட்டிருந்த சிறுமி துா்காவின் சடலம் கடந்த ஏப்.18-ஆம் தேதி தோண்டியெடுக்கப்பட்டது.
பின்னா், அதே இடத்திலேயே திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் சுதன்சந்தா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் உடல்கூறு ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து தெள்ளாா் போலீஸாா் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ஏழுமலையின் தந்தை தேசிங்கு (60) தொடா்ந்து துா்காவுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரியவந்தது. மேலும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக அவா் மிரட்டியதால் பயந்த துா்கா விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து தேசிங்கை போக்ஸோ சட்டத்தின் கீழ் தெள்ளாா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.