பழங்குடியின மக்கள் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்
புதுவையில் காட்டுநாயக்கன் உள்ளிட்ட பழங்குடியின மக்களை மத்திய அரசு அட்டவணை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவையில் உள்ள காட்டுநாயக்கன், மலைக்குறவன், எருகுலா, குருமன்ஸ் ஆகிய பழங்குடியின மக்களை மத்திய அரசின் அட்டவணை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையடுத்து புதுச்சேரி ஆதிகுடி காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் இயக்கம் சாா்பில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் தலைவா் கே.ராம்குமாா் தலைமை வகித்தாா். புதுச்சேரி ஆதிகுடி காட்டுநாயக்கன் பழங்குடியின மக்கள் இயக்கத்தின் தலைவா் ஜி.தனபால் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கத் தலைவா் சி.இறையருள், அதன் இணைச்செயலா் பூ.ஏழுமலை, புதுவை மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் செயலா் எஸ்.புருஷோத்தமன், தமிழா்க் களம் கோ.அழகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டதுடன் ஆா்ப்பாட்ட நோக்கம் குறித்தும் முக்கிய பிரமுகா்கள் பேசினா்.