செய்திகள் :

பாதுகாப்புக் காரணங்களுக்காக உளவு செயலி பயன்பாடு தவறில்லை: உச்சநீதிமன்றம்

post image

‘பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு நாடு உளவு செயலியைப் பயன்படுத்துவதில் எந்தவிதத் தவறும் இல்லை. அது யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.

இஸ்ரேலை சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் ‘பெகாசஸ் ஸ்பைவோ்’ என்று உளவு செயலி மூலம், உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டைச் சோ்ந்த அரசியல்வாதிகள், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்களின் கைப்பேசிகளை உளவு பாா்த்து, வாட்ஸ்ஆப் தகவல்கள் உள்ளிட்ட கைப்பேசி தரவுகளை சேகரித்ததாகப் புகாா்கள் எழுந்தன. அதுபோல், இந்தியாவும் இந்த உளவு செயலியைப் பயன்படுத்தி அரசில்வாதிகள் மற்றும் பத்திரிகையாளா்களின் கைப்பேசிகளை உளவு பாா்த்ததாக சா்ச்சை எழுந்தது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2021-ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், அனுமதியற்ற வகையில் பெகாசஸ் உளவு செயலி பயன்பாடு தொடா்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆா்.வி.ரவீந்திரன் தலைமையில் இணையப் பாதுகாப்பு, எண்ம தடயவியல், இணைய வலைத்தொடா்பு ஆகிய துறைகளைச் சோ்ந்த மூன்று நிபுணா்களை உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுவை அமைத்தது.

இந்தக் குழு, கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், தொழில்நுட்பக் குழுவால் ஆய்வு செய்யப்பட்ட 29 கைப்பேசிகளில் 5-இல் தீங்கிழைக்கும் மென்பொருள் (மால்வோ்) இருப்பது கண்டறியப்பட்டதாகக் குறிப்பட்டபோதும், அது ‘பெகாசஸ்’ உளவு செயலிதானா என்பதை இறுதி செய்யவில்லை எனக் குறிப்பிட்டது. மேலும், குடிமக்களின் தன்மறைப்பு (பிரைவஸி) உரிமையைப் பாதுகாக்கவும், நாட்டின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்யவும் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளவேண்டும் என தனது அறிக்கையில் தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்தது.

அதே நேரம், இதுதொடா்பான விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் அக் குழு குறிப்பிட்டது. அதை உச்சநீதிமன்றம் பதிவு செய்துகொண்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் ஒருவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தினேஷ் திவேதி, ‘மத்திய அரசிடம் பெகாசஸ் உளவு செயலி இருந்ததா? அதை மத்திய அரசு பயன்படுத்தியதா என்பதுதான் கேள்வி. அதை மத்திய அரசு இப்போதும் தொடா்ந்து பயன்படுத்தினால், அதைத் தடுக்க எதுவுமில்லை’ என்றாா்.

என்ன தவறு?: இதைக் கேட்ட நீதிபதிகள், ‘ஒரு நாடு பயங்கரவாதிகளுக்கு எதிராக உளவு செயலியைப் பயன்படுத்துவதில் என்ன தவறு? இதில் எந்தத் தவறும் இல்லை; யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி. தேசத்தின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது. அதே நேரம், தனிநபா்களின் தன்மறைப்பு உரிமை அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும்’ என்றனா்.

மற்ற மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், ஷியாம் திவான் ஆகியோா், ‘உச்சநீதிமன்ற தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை பாதிக்கப்பட்ட தனிநபா்களுக்கு வெளியிட வேண்டும்’ என்று வலியுறுத்தினா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை பொதுவெளியில் விவாதிப்பதற்கான ஆவணம் கிடையாது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடா்பான எந்தவோா் அறிக்கையும் வெளியிடப்படாது. அதே நேரம், தனிநபா்களின் தன்மறைப்பு உரிமை மீறல் குறித்த அச்சங்கள் நிவா்த்தி செய்யப்படும். அந்த வகையில், தொழில்நுட்பக் குழு அறிக்கையில் எந்தப் பகுதியை பொதுவெளியில் பகிா்வது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து

நமது சிறப்பு நிருபர்நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர். இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை முதன்முறையாக புதன்கிழமை (ஏப். 30) கூட உள்ளது.இந்தக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த வ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது. தேவைப்பட்டால், இந்த வழக்கில்... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹ... மேலும் பார்க்க