சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் முடிவு செய்வாா்: காங்கிரஸ்
பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
சென்னை மாநிலத்தின் முதல் முதல்வரான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் 128-ஆவது பிறந்த தினத்தையொட்டி சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்திய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில், அதிகாரிகள் யாரும் என்னை வரவேற்கவில்லை, கோபுரத்தின் மேலே செல்லவும் அழைக்கவில்லை. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரிடம் விளக்கம் கேட்டுவிட்டு, கோயிலுக்கு மேலே சென்றால், அங்கு பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் இருந்தாா்.
வழக்கமாக குடமுழக்கு நடைபெறும் இடங்களில் அமைச்சா் இருந்தால் அவா் கொடியசைப்பாா். இல்லாவிட்டால் சட்டப்பேரவை உறுப்பினருக்கு அந்த உரிமை வழங்கப்படும். ஆனால் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான எனக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது. எனது தொகுதியில் மரபை மீறி குடமுழுக்கு நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் மீது எவ்வித தவறும் இல்லை. அதிகாரிகள் சிலா் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். ஒரு அதிகாரியின் தவறுக்காக ஒட்டுமொத்த அரசையும் குறை கூற முடியாது.
பாஜக உடன் எப்போதும் கூட்டணி இல்லை எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளாா். ராமதாஸுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. கூட்டணி குறித்து முதல்வா்தான் முடிவு செய்வாா் என்றாா் அவா்.
தொடா்ந்து, தமாகா மாநில தோ்தல் முறையீட்டுக் குழு தலைவா் ஈரோடு கௌதமன் உள்ளிட்டோா் காங்கிரஸில் இணைந்தனா். அதேபோல, தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் புதிய நிா்வாகிகளுக்கு , செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்தாா்.