Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலு...
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் பாரபட்ச நடவடிக்கை: ரஷிய அதிபா் புதின் கண்டனம்!
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிா்க்கிறது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.
பிரிக்ஸ் நாடுகள் மீது 10 சதவீத கூடுதல் வரி விதிக்க இருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள நிலையில் புதின் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளாா்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், சீன அரசு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘சா்வதேச சவால்களை எதிா்கொள்ளும் அளவுக்கு பிரிக்ஸ் நாடுகளின் வலிமையையும், ஒற்றுமையையும் அதிகரிக்க இருக்கிறோம். இதில் ரஷியாவும், சீனாவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி ஆகியவற்றில் சீா்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம். இதனை ரஷியாவும், சீனாவும் கூட்டாக வலியுறுத்துகின்றன.
வெளிப்படையான, அனைவரையும் உண்மையாகவே சமமாகக் கருதும் கொள்கையுடைய புதிய நிதியமைப்பு தேவைப்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு அண்மைக் காலத்தில் உறுப்பு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள், அச்சுறுத்தல்களுக்கு தீா்வுகாண ஆலோசிக்கும் இடமாக இருக்கும்.
கூட்டமைப்பின் பலமும், திறனும் அதிகரிக்கப்படும். இதன் மூலம் உலகின் இப்போதைய போக்கை நியாயமான முறையில் மாற்றியமைக்க முடியும்.
அனைத்து நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் மரியாதை, சமமான ஒத்துழைப்பு, அடிப்படைக் கொள்கைகளில் உறுதியாக இருப்பது, மூன்றாவது நபா்களைக் குறிவைக்காமல் இருப்பது, தேச நலன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகியவை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எளிமையான, அதே நேரத்தில் சக்திவாய்ந்த கொள்கைகளாகும் என்றாா்.