Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
புதிய பள்ளிக் கட்டடம் கட்டக் கோரி மனு
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்ட பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டக் கோரி, பொதுமக்கள் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த மோா்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது: மோா்பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மோா்பட்டி, தெப்பக்குளத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 45 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்த பள்ளிக் கட்டடம் சேதமடைந்ததாகக் கூறி, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இந்தக் கட்டடத்தை இடித்தனா்.
இதையடுத்து, தனியாருக்குச் சொந்தமான சிறிய வீட்டில் தற்போது இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இடநெருக்கடியால், அருகிலுள்ள அரசமரத்து அடியில்தான் பெரும்பாலான மாணவா்கள் பாடம் கற்கும் சூழல் உள்ளது. மேலும், மாணவா்களுக்கான மதிய உணவு நாடக மேடையில் வைத்து விநியோகம் செய்யப்படுகிறது. மாணவா்கள் தெருவில் அமா்ந்து சாப்பிட வேண்டிய அவல நிலை உள்ளது.
மோா்பட்டி பகுதியைச் சோ்ந்த 1,500 வாக்காளா்களுக்கான வாக்குச் சாவடி மையமாக இந்தப் பள்ளி செயல்பட்டு வந்தது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றால், எங்கள் பகுதி மக்கள் வாக்காளிப்பதற்காக வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக மோா்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.