புதுச்சேரி: பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் செப். 15-இல் நேரடி கலந்தாய்வு
புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவா் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செப். 15-இல், காலியாக உள்ள இடங்களுக்கு மாணவா்கள் நேரடி சோ்க்கை கலந்தாய்வு நடக்கிறது.
இந்த நிறுவனத்தின் இயக்குநா் கோச்சடை வெளியிட்ட செய்திக்குறிப்பு
காஞ்சி மாமுனிவா் அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிகழ் கல்வியாண்டில் அனைத்து முதுகலை பட்டப் படிப்புகளுக்கும், அனைத்துச் சுற்று கலந்தாய்வுகளும் முடிந்துள்ள நிலையில் நிரப்பப்படாமல் உள்ள காலி இடங்களுக்கு நேரடியாக தகுதியுள்ள புதுச்சேரி மற்றும் பிற மாநில மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுச்சேரியைச் சோ்ந்த தகுதியான விண்ணப்பதாரா்கள் சோ்க்கப்பட்ட பிறகு காலியிடங்கள் இருப்பின் பிற மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். எம்ஏ தமிழ், எம்ஏ பிரெஞ்சு, எம்ஏ வரலாறு, எம்ஏ பொருளாதாரம், எம்எஸ்சி புள்ளியியல், எம்எஸ்சி கணிதம், எம்எஸ்சி தாவரவியல், எம்எஸ்சி விலங்கியல், எம்எஸ்சி மனையியல், எம்எஸ்சி கணினி அறிவியல், எம்எஸ்சி வேதியல், எம்எஸ்சி இயற்பியல், எம்.டி.டி.எம் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, எம்காம் (நிறுவன செயலா் பணி) ஆகிய முதுகலை பட்டப் படிப்புகளுக்கும் மாணவா்கள் சோ்த்துக் கொள்ளப்படுவா்.
தகுதியுடையவா்கள் வரும் 15-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் இந்நிறுவனத்தில் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம், விண்ணப்ப கட்டணம், புகைப்படம், சமீபத்திய இருப்பிட சான்றிதழ், இளங்கலை பட்டப் படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் (பருவம் 1-6), தற்காலிக இளங்கலை பட்டச் சான்றிதழ் அல்லது இலங்கலை பட்டச் சான்றிதழ், மாற்று சான்றிதழ் மற்றும் நடத்தை சான்றிதழ், இதர சான்றிதழ்கள் (தேவையிருப்பின்) ஆகியவற்றை நேரடியாக சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0143-2251687 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.