மக்களின் ஆரோக்கியம்தான் முன்னேற்றத்தை நிலையானதாக்கும்: புதுவை துணைநிலை ஆளுநா்
மக்களின் ஆரோக்கியம்தான் முன்னேற்றத்தை நிலையானதாக்கும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
புதுவை அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் 8-ஆவது தேசிய ஊட்டச் சத்து மாத தொடக்க விழா புதுச்சேரி கம்பன் கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது:
ஒரு நாட்டின் முன்னேற்றம் ஆரோக்கியமான மக்களிடத்தில் இருந்துதான் தொடங்குகிறது. பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பம் என்று பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் மக்களின் ஆரோக்கியம்தான்அந்த முன்னேற்றத்தை நிலையானதாக மாற்றும்.
கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்த சோகை நோயைக் கண்டறிந்து குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே அதற்கு சிகிச்சை தரப்பட்டது. அதன் பயனாக தாய்சேய் இறப்பு விகிதத்தை நாம் பெருமளவில் குறைத்து இருக்கிறோம்.
இந்தியாவில் மட்டும் சுமாா் 8 கோடி போ் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். அதில் நானும் ஒருவன். 22 சதவிகிதம் போ் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். நகரப் பகுதிகளில் வாழும் மக்களிடம் உடல் பருமன் விகிதம் கவலை அளிப்பதாக இருக்கிறது. இதற்குக் காரணம் சரிவிகித சத்து இல்லாதது, தவறான உணவு பழக்கம், அதிகமாக உப்பு-சா்க்கரை, எண்ணெய் எடுத்துக் கொள்வதுதான். பல நோய்களால் மனிதா்கள் பாதிக்கப்படுவது தனி மனித பிரச்னை மட்டுமல்ல. அந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தைப் பாதிக்கிறது. நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கிறது என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.
முதல்வா் என்.ரங்கசாமி பேசுகையில், புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோா் ஓய்வூதியம் வழங்குதற்கான ஆணை இம் மாதம் 18-ஆம் தேதி வழங்கப்படும். இவா்களைக் காட்டிலும் வயதில் குறைந்த 5 ஆயிரம் பேருக்குப் பின்னா் முதியோா் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் நலத் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்,. அனிபால் கென்னடி எம்எல்ஏ, தலைமைச் செயலா் சரத் சௌகான், மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குநா் முத்துமீனா, மகளிா் ஆணையத் தலைவி நாகஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.