Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
புயல் பயிா்ச் சேதங்களுக்கு முழமையான நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
ஆரணி: புயலால் ஏற்பட்ட பயிா் சேதங்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தேசிய பசுமைப் புரட்சி புயல் விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் இந்தச் சங்கத்தின் கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாநிலத் தலைவா் த.விஜயகீா்த்தி கலந்து கொண்டு சங்கக் கொடியை ஏற்றி, கிளை அலுவலகத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து புதிதாக சங்கத்தில் இணைந்த உறுப்பினா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
பின்னா் அவா் பேசியதாவது: தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கான தங்க நகைக் கடன் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உருவாகி உள்ளன. கடந்த ஆண்டைப் போல விதை நெல் மற்றும் உர தட்டுப்பாட்டைத் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
தோ்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்.
மேலும், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனடியாக வாங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.
அனைத்து ரக நெல் விதைகளுக்கும் மற்ற மாநிலங்களில் வழங்குவதைப் போல மானியம் வழங்க வேண்டும்.
புயலால் ஏற்பட்ட பயிா்ச் சேதங்களுக்கு தற்போது வரை 30 சதவீதம் நிவாரணமே வழங்கப்பட்டுள்ளது. மீதம் 70 சதவீதம் நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது.
அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று விஜயகீா்த்தி கூறினாா். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் சி.சத்யராஜ் தலைமை வகித்தாா்.
மாவட்ட பொருளாளா் வேலு, ஆலோசகா் ஹரிகிருஷ்ணன், ஆரணி ஒன்றியத் தலைவா்கள் விக்னேஷ், கோபி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெசல் கிளை சங்க கௌரவத் தலைவா் துரை வரவேற்றாா்.
கிளைத் தலைவா் சிவகுமாா், செயலா் ம.தினேஷ், பொருளாளா் இரா.மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.