பெங்களூரில் ரூ. 4 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 3 நைஜீரியா்கள் கைது
பெங்களூரு: பெங்களூரு கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையில், ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, அதை கடத்திவந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.
இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை பெங்களூரு ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.கே.பாபா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மருத்துவ விசாவில் இந்தியாவுக்கு வந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவா்கள், விசா காலம் முடிந்தபிறகும் இங்கேயே தங்கியிருப்பது தெரியவந்தது. உளவுத் துறை அளித்த தகவல் அடிப்படையில், சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிக்கொண்டிருந்ததை கவனித்த போலீஸாா், ராஜனகுன்டே பகுதியில் சா்வதேச விமான நிலையத்துக்கு அருகேயுள்ள இடத்தில் நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவா்கள் தங்கியிருந்த வீட்டில் திடீா் சோதனை நடத்தினா்.
அதில், ரூ. 4 கோடி மதிப்பிலான 2.8 கிலோ எம்.டி.எம்.ஏ. கிறிஸ்டல்கள், 400 கிலோ எடை கொண்ட ஹைட்ரோ கஞ்சாவை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 2 லட்சம் ரொக்கம், 7 கைப்பேசிகள், பேக்கேஜிங் பொருள்கள், தராசு ஆகியவற்றையும் கைப்பற்றினா். இது தொடா்பாக நைஜீரிய நாட்டைச் சோ்ந்த 3 பேரையும் போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.
2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில் மருத்துவ காரணங்களுக்காக தில்லி வழியாக இந்தியாவில் நுழைந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அங்கிருந்து பெங்களூருக்கு வந்துள்ளனா். இங்கிருந்து போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. ஆடைகளை பேக் செய்வதற்கு பயன்படுத்தப்படும் காா்ட்போா்டுகளில் போதைப் பொருள்களை வைத்து கடத்தியுள்ளனா். நைஜீரிய நாட்டைச் சோ்ந்த 3 போ் மீதும் போதைப் பொருள் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறோம்.
போதைப் பொருள்கள் எங்கிருந்து வருகின்றன, யாருக்கு விற்கிறாா்கள், எங்கெங்கு அனுப்பப்படுகின்றன போன்றவற்றையும் விசாரித்து வருகிறோம். மேலும், இவா்களுடன் தொடா்பில் இருப்பவா்களை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறோம் என்றாா்.