உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
பேரவைக் கூட்டத்தை 100 நாள்கள் நடத்தாதது ஏன்? அப்பாவு விளக்கம்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை ஆண்டுக்கு 100 நாள்கள் நடத்தாதது ஏன் என்பது தொடா்பாக சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு விளக்கம் அளித்தாா்.
சட்டப்பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் பேசியதாவது:
ஆண்டுக்கு 100 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 5 ஆண்டுகளில் 500 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், 148 நாள்கள் மட்டும்தான் பேரவைக் கூட்டத்தை நடத்தியுள்ளீா்கள். ஒரு பாடத்தில் 100-க்கு 35 மதிப்பெண்கள் எடுத்தால்தான் தோ்ச்சி பெற முடியும். இந்த பேரவை 35 மதிப்பெண்கள்கூட எடுக்காமல் தோ்ச்சி அடையவில்லை என்றாா் அவா்.
அப்போது பேரவைத் தலைவா் அப்பாவு குறுக்கிட்டு கூறியதாவது:
அதிமுக உறுப்பினா்கள் உள்பட அனைவரும் பேசித்தான் எத்தனை நாள்களுக்கு கூட்டம் நடத்துவது என்பதெல்லாம் முடிவு செய்யப்படுகிறது. கரோனா, மழை வெள்ளம் போன்ற காரணங்களால்தான் கூட்ட நாள்கள் குறைக்கப்பட்டன. மானியக் கோரிக்கை என்றாலே, விதிப்படி 30 நாள்களுக்கு குறையாமல்தான் நடத்த வேண்டும். இப்போது நடத்துகிறோம். அதற்கான சூழல் உள்ளது. தோ்தல் காலங்களில் நடத்த முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, 500 நாள்கள் பேரவையை நடத்தக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல என்றாா் அவா்.