கர்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ் விநியோகம்; அரசு மருத்துவமனை முற்றுகை - திருப்பூ...
போட்டியிலிருந்து விலகிய போஸ் வெங்கட்.. பின்னணியில் நடந்தது என்ன? டிவி நடிகர் சங்கத் தேர்தல் கலாட்டா
தமிழத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை உறுப்பினர்களாகக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தேர்தல் ஆக்ஸ்ட் பத்தாம் தேதி நடக்கவிருக்கிறது.
தற்போது சங்கத்தின் செயலாளராக இருக்கும் போஸ் வெங்கட் மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடப் போவதாக சில தினங்களுக்கு முன்பே விளம்பரமெல்லாம் செய்திருந்தார்.
போஸ் வெங்கட் அணி தவிர தினேஷ் தலைமையில் ஒரு அணி பரத் தலைமையில் ஒரு அணி என இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது.

இவர்கள் தவிர நடிகை ஆர்த்தி கணேஷ்கர் தனியாக தலைவர் பதவிக்கு மட்டும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், போஸ் வெங்கட் போட்டியிடும் செயலாளர் பதவிக்கு பரத் அணி சார்பாக நவீந்தர் போட்டியிடுகிறார்.
நவீந்தர் போஸ் வெங்கட் இருவருமே திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒரே பதவியை இருவரும் குறி வைப்பது உறுப்பினர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இது தொடர்பாக நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் நேற்று வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள். மூன்று அணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் எல்லாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்த நிலையில் கடைசி வரை போஸ் வெங்கட் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை.
இதனால் உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் நிலவ கடைசி நிமிடத்தில் நடிகை நிரோஷா வந்து அந்தப் பதவிக்குப் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார். அதாவது போஸ் வெங்கட்டுக்குப் பதிலாக அவர் வந்தார்.
போஸ் வெங்கட் கடைசி நேரத்தில் பின் வாங்கியது குறித்து சின்னத்திரை வட்டாரத்தில் விசாரித்தோம்.
''இந்தத் தேர்தல்ல போட்டியிட ஆரம்பத்துலயே அவருக்கு விருப்பமில்ல. உறுப்பினர்கள் சிலரின் வற்புறுத்தலாலேயே போட்டியிட சம்மதிச்சார். ஆனா மூன்று அணிகள் போட்டியிடும்னு அவர் எதிர்பார்க்கல. பலமுனைப் போட்டி உறுப்பினர்களுக்கும் சங்கத்துக்கும் நல்லதில்லைன்னு நினைச்ச அவர் அதனாலேயே போட்டியிலிருந்து விலகுகிற முடிவை எடுத்தார்' என்கிறார்கள் சிலர்.

வேறு சிலரோ செயலாளர் பதவிக்குத் திமுகவை சேர்ந்த ரெண்டு நடிகர்கள் போட்டியிடும் நிலைமை உருவானதுல ரொம்பவே சங்கடப்பட்டார். இப்படியான சூழலால் கட்சித் தலைமைகிட்ட தேவையில்லாத கெட்ட பெயரை உருவாக்கலாம்னு நினைச்சதால் அவரே விலகிட்டார்' என்கிறார்கள்.