மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்: ஐ.நா. அமர்வில் இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் பேச்சு
நமது சிறப்பு நிருபர்
மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமர்வில் இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தலைமையிலான இந்திய குழு பங்கேற்றுள்ளது. சமூக மேம்பாட்டு சவால்களை எதிர்கொள்வது குறித்த விவாதங்கள், ஒத்துழைப்புகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த அமர்வு நடைபெற்றது. இந்தியா, பிரான்ஸ், துருக்கி, சவூதி அரேபியா, ஸ்வீடன் உள்பட 16 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் 49 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் "கூட்டு ஒருமைப்பாடு மற்றும் சமூகப் பிணைப்பை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வில் இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் பேசியதாவது:
எந்த தரப்பு சமூகமும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக கூட்டு ஒருமைப்பாடு, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தல் பற்றி விவாதிக்கப்படுவது பாராட்டுக்குரியது. 1995-ஆம் ஆண்டு கோபன்ஹேகன் சமூக மேம்பாட்டு உச்சிமாநாட்டின் சமூகக் கொள்கைகளை முன்னெடுப்பதிலும், சமூக நல்வாழ்வை வளர்ப்பதிலும் இந்திய முக்கியத்துவம் அளித்து வருகிறது. வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
கர்ப்பத்திற்கான ஆரோக்கியம், மாசுபடுத்தாத சமையல் எரிபொருள், பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம், மலிவு விலை வீடுகள் வழங்குதல் உள்ளிட்டவற்றில் மகளிர், ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை முறையை இந்தியா மாற்றியுள்ளது. ஏழைகளுக்காக 4 கோடிக்கு அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் மகளிர் உரிமையாளர்களாகவும் அல்லது கூட்டு உரிமையாளர்களாகவும் உள்ளனர். அதே நேரத்தில் நீடித்த வளர்ச்சிக்கான எண்ம பொது உள்கட்டமைப்பிலும் இந்தியா முன்னோடியாக உள்ளது.
"அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும், அனைவரின் நம்பிக்கையுடனும் அனைவரும் உயர்வோம்' என்ற தொலைநோக்குப் பார்வையால் இந்தியா இயக்கப்படுகிறது. மக்கள் வங்கிக் கணக்கு, ஆதார், கைப்பேசி ஆகிய மூன்றின் இணைப்பு போன்ற முயற்சிகளின் மூலம், பின்தங்கிய சமூகங்களுக்கு, குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு நிதி சார் நடவடிக்கை ஆகியவற்றை இந்தியா செயல்படுத்தியுள்ளது. வளர்ச்சிப் பாதையை வடிவமைப்பதில் மகளிர் முக்கிய பங்கு வகிப்பதை உறுதி செய்து, "மகளிர் தலைமையிலான வளர்ச்சியை' நாடு பெற்றுள்ளது.
2030-ஆம் ஆண்டு வளர்ச்சிக்கான முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்காக இந்தியா செயல்பட்டு வரும் நிலையில், வேலைவாய்ப்புகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரிப்பது ஒரு முக்கிய முன்னுரிமையாகும்.
இந்தியாவின் வலுவான சமூகப் பாதுகாப்பு என்ற அம்சத்தின்கீழ் 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 3.75 கோடி தாய்மார்களுக்கான மகப்பேறு சலுகைகள், பெண்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய உதவி எண் போன்ற சலுகைகளும், திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், இந்தியாவின் தொடக்ககால குழந்தைப் பருவ பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் கல்வி முயற்சிகளால் 10 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், தாய்மார்கள், இளம் பருவப் பெண்கள் பயனடைகின்றனர்.
சுமார் 10 கோடி மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். உலகளாவிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கும், அனைவருக்கும் ஒரே நீதியான உலகத்தை நோக்கிய ஆணையத்தின் முயற்சிகளை ஆதரிப்பதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.
உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலமும், உள்நாட்டுத் தீர்வுகளை உருவாக்குவதன் மூலமும், இந்தியா உலகில் தென்பகுதி நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது என்றார் சாவித்ரி தாக்கூர்.