மகாராஷ்டிரத்துக்கு வெளிநாட்டு நிதி பெற அனுமதி! கேரளத்துக்கு மட்டும் ஏன் மறுப்பு?
கேரளத்துக்கு மறுக்கப்பட்ட நிதியுதவி, மகாராஷ்டிரத்துக்கு அனுமதிக்கப்பட்டது ஏன் என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மழை வெள்ளம், வறட்சி மற்றும் தீ விபத்துகள் போன்ற இயற்கை பேரிடா்களின்போது பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் மகாராஷ்டிர மாநில முதல்வா் நிவாரண நிதிக்கு, வெளிநாட்டு நிதி பெறும் வகையில், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010-இன்கீழ் (எஃப்சிஆா்ஏ) உரிமம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டில் கேரளத்துக்கு வெளிநாட்டு நிதி பெற மறுத்த மத்திய அரசு, தற்போது மகாராஷ்டிரத்துக்கு மட்டும் வழங்கியது ஏற்கக் கூடியதாக இல்லை என்று சமூக ஊடகங்களில் இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
2018 ஆம் ஆண்டில் கேரளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த பேரிடருக்கு நிவாரண நிதியாக 2.85 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
இந்த பேரிடருக்கு ஐக்கிய அரபு அமீரகம் 100 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முன்வந்தது. இருப்பினும், வெளிநாடுகளில் நிதி பெறுவது என்பது நன்றாக இல்லை என்றுகூறி, அதனை இந்தியா மறுத்து விட்டது.
கேரளத்தை சேர்ந்தவர்கள் கத்தார், தாய்லாந்து, மாலத்தீவுகளிலும் பணிபுரிவதால், அந்த நாடுகளும் நிதியுதவி அளிக்க முன்வந்தன.
இதையும் படிக்க:சசி தரூர் விளக்கத்தால் பாகிஸ்தானுக்கு கொலம்பியா தெரிவித்த இரங்கல் வாபஸ்