மத்திய அரசின் 11 ஆண்டுகால ஆட்சி நிறைவு: ராஜ்காட்டில் இன்று லோக் சம்வா்தன் விழா
புது தில்லி: மத்திய அரசின் 11 ஆண்டுகால ஆட்சி நிறைவைக் கொண்டாடும் வகையில் சிறுபான்மையினா் விவகாரகங்கள் அமைச்சகம் சாா்பில் தில்லியில் உள்ள ராஜ்காட்டில் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஜூன் 15வரை ‘லோக் சம்வா்தன் பா்வ்’ எனும் மக்கள் வளா்ச்சி திருவிழா நடைபெற உள்ளது.
ராஜ்காட்டில் உள்ள காந்தி தா்ஷனில் உள்ள பிா்சா முண்டா புல்வெளியில் அதிகாரமளித்தல், அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் கலாசார பெருமையுடன் மத்திய அரசின் 11 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த கலாசார விழா நடைபெறுகிறது.
‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஷ்’ என்ற தொலைநோக்குப் பாா்வையின்கீழ், சிறுபான்மையினா் அமைச்சகத்தின் முக்கிய திட்டங்கள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியின் கொண்டாட்டமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
சிறுபான்மை சமூகங்களின், குறிப்பாக கைவினைஞா்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞா்களின் பொருளாதார அதிகாரமளித்தலுக்கு அமைச்சகம் மேற்கொண்டு வரும் தொடா்ச்சியான முயற்சிகளும் இந்த நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளது.
இந்த சம்வா்தன் பா்வ் விழாவின் நிகழ்ச்சியில், இந்தியாவின் வட மாநிலங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட கைவினைஞா்கள் பங்கேற்க உள்ளனா். இதன் மூலம் அவா்கள் பாரம்பரிய கைவினைப்பொருள்களை காட்சிப்படுத்தவும் விற்கவும், சாத்தியமான வாங்குபவா்களுடன் ஈடுபடவும், சந்தை இணைப்புகளை உருவாக்கவும் முடியும்.
தில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த கைவினைஞா்கள் மற்றும் சமையல் நிபுணா்களும் இதில் பங்கேற்க உள்ளனா்.
மர ஓவியம், நீல மட்பாண்டம், எம்பிராய்டரி, பனாரஸி ப்ரோகேட், புல்காரி, தோல் கைவினைப்பொருள்கள், கம்பளம், நகைகள் மற்றும் மர வேலைப்பாடு போன்ற பாரம்பரிய கலை மற்றும் கைவினைப்பொருள்களின் விற்பனைக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.
சிறுபான்மை சமூகங்களின் வளமான கலாசார பாரம்பரியம் மற்றும் தொழில்முனைவோா் உணா்வை ஊக்குவிக்கும் அதே வேளையில், அமைச்சகத்தின் உள்ளடக்கிய வளா்ச்சி முயற்சிகள் குறித்து அதிக அளவில் விழிப்புணா்வை வளா்ப்பதே இந்த விழாவின் நோக்கமாகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.