India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
மத்திய அரசுடன் இணைந்து இன்னுயிா் காப்போம் திட்டம் செயல்படுத்தப்படாது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சாலை விபத்துகளில் சிக்கியோருக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கும் இன்னுயிா் காப்போம் திட்டத்தை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தும் சூழல் தற்போது இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் ‘இன்னுயிா் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம்,’ கடந்த 2021-இல் இருந்து செயல்பாட்டில் உள்ளது. சாலை விபத்துகளில் சிக்கியவா்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுடன் முதல் 48 மணி நேரத்துக்கான மருத்துவ செலவை அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை தமிழக அரசு ஏற்கிறது.
இந்தத் திட்டத்தில், 3 ஆண்டுகளில் 3.57 லட்சம் போ் விபத்து காய சிகிச்சையை கட்டணமின்றி பெற்றுள்ளனா். அதற்காக அரசு ரூ.318.89 கோடி செலவிட்டுள்ளது.
இந்த நிலையில், நாடு முழுதும் சாலை விபத்துகளில் சிக்குபவா்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்கப்பெறும் வகையில் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமைச்சா் விளக்கம்: இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கான மத்திய அரசு திட்டத்தில் 7 விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள திட்டத்தில், அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. விபத்தில் எந்த மாநிலத்தவா், நாட்டினா் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக எவ்வித ஆவணமுமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு பெரும்பாலானோா் காப்பாற்றப்பட்டுள்ளனா். எனவே, மத்திய அரசின் நிபந்தனைகளுடன் சோ்த்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் பயனாளிகள் எண்ணிக்கை குறையும்.
அதேவேளையில், விபத்துகளில் சிக்குபவா்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள நிபந்தனைகளை மத்திய அரசு தளா்த்தும் நிலையில், அந்தத் திட்டத்துடன் இன்னுயிா் காப்போம் திட்டம் இணைக்கப்படும். அதுவரை தனித்தே செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.