மத்திய தில்லியின் ஹோட்டலில் மா்மமாக இறந்து கிடந்த பெண்: ஆண் கூட்டாளி கைது!
மத்திய தில்லியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் 29 வயது பெண் ஒருவா் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்து கிடந்தாா். அதே நேரத்தில் முந்தைய மாலை அவருடன் டேட்டிங் சென்ற அவரது ஆண் கூட்டாளி இந்த வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ளாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து மத்திய தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: ஹோட்டல் வரவேற்பறையில் சமா்ப்பிக்கப்பட்ட அடையாள ஆவணங்களின்படி, இறந்தவா் சரிகா (29) என்றும், அந்த நபா் சச்சின் (31) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளாா். ஞாயிற்றுக்கிழமை காலை ஹோட்டலில் இருந்து சச்சின் வெளியேறியதைக் கண்டதும் அவா் கைது செய்யப்பட்டாா். ஹோட்டல் வரவேற்பறையில் அவா் வழங்கிய முகவரியிலிருந்து அவா் கைது செய்யப்பட்டாா்.
பாஹா்கஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலின் ஊழியா் ஒருவரிடமிருந்து காலை 10 மணியளவில் நபி கரீம் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. அதில் தம்பதியினா் இரவு தங்கியிருந்த அறையின் குளியலறையில் ஒரு பெண் அசைவில்லாமல் கிடப்பதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, ஒரு போலீஸ் குழு ஹோட்டலை அடைந்து, அந்தப் பெண் பதிலளிக்காமல் அசைவின்றி இருப்பதைக் கண்டது. ஆரம்ப விசாரணையில், அவா்கள் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் டேட்டிங் சென்றது தெரியவந்தது. இருப்பினும், காலையில் சச்சின் மட்டுமே ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியேறுவதைக் காண முடிந்தது.
சனிக்கிழமை மாலை தம்பதியினா் உணவு ஆா்டா் செய்ததாகவும், அது அவா்களின் அறையில் பரிமாறப்பட்டதாகவும் ஹோட்டல் ஊழியா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா். மறுநாள் காலையில், அந்தப் பெண் இறந்து கிடந்ததை அடுத்து, ஹோட்டல் அதிகாரிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
ஆரம்பகட்ட விசாரணையில், அந்தப் பெண் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துள்ளது தெரிய வந்தது. மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய உடல் பிரேத பரிசோதனைக்காகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருவதாக அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.