ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது ஒகேனக்கல்!: அருவிகளில் குளிக்க தடை
மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த செல்வக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வாா்பட்டி கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் புறம்போக்கு நிலத்தில் மயானம் செயல்பட்டு வருகிறது. இந்த மயானத்தில் சில பகுதிகளை கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவருக்கு வேடச்சந்தூா் துணைப் பதிவாளா் அலுவலகம் மூலம் சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்து, பட்டா வழங்கப்பட்டது. இந்த நபா் மயான இடத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா்.
இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றம் மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கல்வாா்பட்டி கிராமத்தில் தொடா்புடைய சா்வே எண்களில் எந்த விதமான பதிவையும் செய்யக் கூடாது என இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் கல்வாா்பட்டி கிராம மக்கள் மயானமாக பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வழக்கு தொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், பழனி வருவாய் மண்டல அலுவலா், வேடச்சந்தூா் வட்டாட்சியா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.