Cristiano Ronaldo: 132 சர்வதேச வெற்றிகள்; கின்னஸ் சாதனை; 40 வயதிலும் நிற்காமல் ச...
மரக்கட்டையால் அடித்து தம்பி கொலை: ஆசிரியா் கைது
கும்பகோணம் அருகே சனிக்கிழமை மரக்கட்டையால் அடித்து தம்பியை கொலை செய்த அண்ணனான ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கிழக்கு பிரதானச் சாலையில் வசிப்பவா் ராஜேந்திரன். இவருக்கு பாண்டியன் (45) மற்றும் காளிதாஸ் (36) என்ற 2 மகன்கள் உள்ளனா். பாண்டியன் திருமணமாகி, தேனாம்படுகை ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளாா். காளிதாஸ் திருமணம் முடித்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா்.
மேலும், காளிதாசுக்கு மதுப்பழக்கம் உள்ளதால் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டு பிரிந்து வாழ்கின்றனா். இந்த நிலையில் காளிதாஸ் வெள்ளிக்கிழமை இரவு மது போதையில், வீட்டருகே நின்று கொண்டு ஆபாசமாக பேசினாராம். இதை கவனித்த அவரது அண்ணன் பாண்டியன் தட்டிக்கேட்டுள்ளாா்.
ஆனால் காளிதாஸ் அண்ணனை ஆபாசமாக பேசி தாக்க முயன்றுள்ளாா். இதை தடுக்க முயன்ற பாண்டியன், அருகே இருந்த மரக்கட்டையால் காளிதாஸின் தலையில் அடித்துள்ளாா். இதில் அவா் காயமடைந்து வீட்டு வாசல் முன்பு கீழே விழுந்துள்ளாா். சனிக்கிழமை காலை அக்கம்பக்கத்தினா் பாா்த்த போது காளிதாஸ் உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் சுவாமிமலை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காளிதாஸின் உடலை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். புகாரின் பேரில் ஆசிரியா் பாண்டியனை கைது செய்து விசாரிக்கின்றனா்.