2025-26 ஆம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர்கள் விவரம்! புதுமுகங்கள் இருவருக்கு வாய்ப்பு!
2025-26 ஆம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர்கள் விவரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் புதுமுகங்கள் இருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எலைட் நடுவர்கள் விவரத்தை அறிவித்துள்ளது. அதில், அல்லாவுதீன் பலேகர் மற்றும் அலெக்ஸ் வார்ஃப் ஆகியோர் எலைட் நடுவர்களாக இணைந்துள்ளனர். அதே நேரத்தில் மைக்கேல் கோஃப் மற்றும் ஜோயல் வில்சன் ஆகிய இருவரும் புதிய நடுவர்களுக்கு இவர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரான அல்லாவுதீன் பலேகர், நான்கு டெஸ்ட், 23 ஒருநாள் மற்றும் 67 டி20 போட்டிகள் மற்றும் மொத்தம் 17 பெண்களுக்கான ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். இவர் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 19 வயதுக்குள்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற முக்கிய ஐசிசி போட்டிகளிலும் நடுவராக பணியாற்றியுள்ளார்.
இதையும் படிக்க: லட்சக்கணக்கானோர் ஏமாற்றம்! நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - ஆர்சிபி டிக்கெட்டுகள்!
அலெக்ஸ் வார்ஃப் தனது 16 வருட முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான அனுபவங்களைக் கொண்டுள்ளார். இங்கிலாந்துக்காக 13 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
வார்ஃப் ஆண்களுக்கான 7 டெஸ்ட் போட்டிகள், 33 ஒருநாள் போட்டிகள் மற்றும் 45 டி20 போட்டிகளில் களத்தில் நடுவராக பணியாற்றியுள்ளார். ஐசிசி ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைகள், 2024 இல் ஆண்கள் மற்றும் பெண்கள் டி20 உலகக் கோப்பைகள், சமீபத்தில் நடந்து முடிந்த ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
ஐசிசி நடுவர்கள் விவரம்
குமார் தர்மசேனா (இலங்கை), கிறிஸ்டோபர் கஃபானி (நியூசிலாந்து), அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் (தென்னாப்பிரிக்கா), ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து), ரிச்சர்ட் கெட்டில்பரோ (இங்கிலாந்து), நிதின் மேனன் (இந்தியா), அல்லாவுதீன் பலேகர் (தென்னாப்பிரிக்கா), அஹ்சன் ராசா (பாகிஸ்தான்), பால் ரீஃபெல் (ஆஸ்திரேலியா), ஷர்புதூலா இப்னே ஷாஹித் (வங்கதேசம்), ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), அலெக்ஸ் வார்ஃப் (இங்கிலாந்து).
இதையும் படிக்க: நான் இம்பாக்ட் பிளேயர் கிடையாது; என்ன சொல்கிறார் எம்.எஸ்.தோனி?