Heat Stroke: கோடைக் கால நோய்களைத் தடுப்பது எப்படி? வழிகாட்டும் புதுச்சேரி சுகாதாரத்துறை
கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் வெப்ப அலையின் தாக்கம் குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் ரவிச்சந்திரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், `புதுச்சேரியில் அடுத்தடுத்து வரும் நாட்களில் சராசரி வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவித்திருக்கிறது.
குறிப்பாக உடலின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவு அதிகரிப்பதும், அதனுடன் குமட்டல், வாந்தி, கடுமையான தலைவலி, சோர்வு, கால் பிடிப்பு, மூச்சுத் திணறல், நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்றவை வெப்பம் சார்ந்த நோய்க்கான அறிகுறிகள்.

இப்படியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். மேலும் பொதுமக்கள் நண்பகல் 12:00 மணி முதல் 3.00 மணி வரை அத்தியாவசியமான தேவைகள் இன்றி வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம்.
மதிய நேரங்களில் வெளியில் நிறுத்தப்படுகிற கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் உங்கள் குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை விட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
அந்தந்த பகுதிகளில் உள்ள சமுதாய நல்வழி மையங்கள் மற்றும் ஆரம்பச் சுகாதார மையங்கள் மூலமாக, பல்வேறு மக்கள் சார்பு துறையின் மூலமாகவும் மனித உயிரிழப்பு மற்றும் உடல் பாதிப்பு தாக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
மேலும் வெப்பத்தினால் ஏற்படும் அறிகுறிகளைக் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை அளிக்க அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், கோடைக் காலத்தில் பரவும் தொற்று நோய்கள் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கோடைக்காலத்தில் தோல், கண்கள், செரிமான மண்டல தொந்தரவுகள், அம்மை நோய்கள், சளி, இருமல் போன்றவையும், அதிக வெப்பநிலை காரணமாக வரக்கூடிய `ஹீட் ஸ்ட்ரோக்’ போன்றவையும் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.
மேலும் கோடைக் காலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி, தலைச்சுற்றல், பலவீனம், வெப்ப சோர்வு போன்றவை ஹீட் ஸ்ட்ரோக் என்ற வெப்ப பக்கவாதத்தின் அறிகுறிகள்.
உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல் இருந்தால் உறுப்புகள் செயலிழப்பு, சுய நினைவு குறைவு, உயிரிழப்பு போன்றவை ஏற்படலாம்.
ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும்போது தண்ணீர் அல்லது குளிர்ந்த காற்றின் உதவியுடன் உடலைக் குளிர்வித்து சிகிச்சை அளிக்க முடியும்.
இந்த சிகிச்சையை விரைவாக அளிப்பதன் மூலம் உயிரிழப்பைத் தவிர்க்கலாம். அதேபோல கோடைக் காலத்தில் ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
சூடான மற்றும் ஈரப்பதமான சூழலில் பாக்டீரியாக்கள் வளர்ச்சியடைந்து உணவுகள் கெட்டுப் போகின்றன. அதனால் வயிறு அசௌகரியம், வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுகின்றன.
மேலும் வயிற்றுப்போக்கு, டைஃபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் கோடைக் காலத்தில் எளிதாகத் தொற்றிக் கொள்ளக் கூடியவை.
இவற்றைத் தவிர்க்கச் சரியாகச் சமைக்கப்படாத இறைச்சி, அசுத்தமான தண்ணீர், சாலையோரக் கடைகளில் திறந்த வெளியில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கொதிக்க வைத்த நீரை ஆற வைத்துக் கைப்படாமல் குடிக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை நன்றாகக் கழுவி உபயோகப்படுத்த வேண்டும்.
கோடைக் காலத்தில் கான்ஜன்க்டிவைடிஸ் (conjunctivitis) என்ற கண் அழற்சி நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சன் கிளாஸ் பயன்படுத்துதல், கண்களைத் தொடாமல் இருப்பதுடன், கண் பராமரிப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இதைத் தவிர்க்க முடியும்.
கோடைக் காலத்தில் உடலில் நீர்ப் பற்றாக்குறை, தலைவலி போன்றவை மிகச் சாதாரணமாக ஏற்படுபவை.

வியர்வையின் மூலம் அதிக உப்பு சத்துகள் வெளியாகிவிடும். அதனால் உப்பு கலந்த மோர், நீர் பானங்கள் அல்லது ஓ.ஆர்.எஸ் என்ற உப்புக் கரைசலைக் குடிக்க வேண்டும்.
குழந்தைகளுக்குச் சளி, காய்ச்சல், பொன்னுக்கு வீங்கி, சின்னம்மை, தட்டம்மை போன்றவையும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
குழந்தைகள் இருமும்போதும், தும்மும்போதும் மிக எளிதாக மற்றவர்களுக்கும் பரவிவிடும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டுச் சுத்தமாகக் கழுவுவது, முகக்கவசம் அணிவதன் மூலம் இந்த நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
மேற்கண்ட பாதிப்புகள் இருந்தால் உடனே அருகிலிருக்கும் ஆரம்பச் சுகாதார மையங்களிலும், மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்" குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks