Dhoni: "ஆரம்பத்தில் தேவையற்றது என்றே கருதினேன்; ஆனால்..." - Impact Player விதி குறித்து தோனி
IPL தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனி. அதிக ரன்கள் வரும் போட்டிகளுக்கு அணியின் மனநிலைதான் முக்கிய காரணம் என்றும் பேசியுள்ளார்.
2023 ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் உண்மையான இம்பாக்ட் 2024ல், கிட்த்தட்ட 41 போட்டிகளில் 200க்கும் மேல் ரன்கள் வந்தபிறகுதான் தெரியவந்தது.

ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச டாப் 5 ஸ்கோர்கள் ஒரே சீஸனில் (2024) அடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் பல சாதனைகள் முறியடிக்கப்படடன. இதனால் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து விவாதங்கள் எழுந்தன. போட்டியின் தன்மை மாறிவிட்டது எனவும், சலிப்பூட்டுவதாகவும் சில நிபுணர்கள் கூறினர்.
Dhoni சொன்னதென்ன?
சமீபத்தில் தோனி இம்பாக்ட் பிளேயர் விதி பற்றி கருத்து தெரிவித்துள்ளார். "இந்த விதி கொண்டுவரப்பட்டபோது, இது தேவையற்றது என்றே நான் நினைத்தேன். ஐபிஎல் நன்றாகத்தான் உள்ளது, போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கின்றன, இதற்குமேல் இதை மேம்படுத்த அவசியமில்லை எனக் கூறினேன்.

இப்போது இது எனக்கு உதவுகிறது, ஆனால் அந்த நேரத்தில் அப்படி இல்லை. விக்கெட் கீப்பிங் செய்வதனால் நான் இம்பாக்ட் பிளேயர் இல்லை. நான் போட்டியில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.
பலர் இம்பாக்ட் பிளேயர் விதியால் அதிக ஸ்கோர் அடிக்கபடுவதாக கூறுகின்றனர். ஆனால் நான் அது சூழ்நிலையாலும், வீரர்களின் மனநிலையாலும்தான் என நம்புகிறேன்.
ஒரு எக்ஸ்டரா பேட்ஸ்மேன் இருப்பதனால் இவ்வளவு அதிக ரன்கள் வரவில்லை. ஆனால் அதனால் ஏற்படும் கம்ஃபர்டான மனநிலை வீரர்களை ஆக்ரோஷமாக விளையாட அனுமதிக்கிறது.
எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்களை பயன்படுத்துவதனால் அல்ல, அவர்கள் இருக்கும் தைரியத்தால் அதிக ரன்கள் வருகின்றன. டி20 போட்டிகள் இப்படி பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளன." என ஜியோ ஹாட்ஸடாரில் பேசியுள்ளார் தோனி.