Tamim Iqbal: ஃபீல்டிங்கின்போது நெஞ்சு வலி; மருத்துவமனையில் சொல்வதென்ன?
வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத முன்னாள் வீரர் தமிம் இக்பாலுக்கு நேற்று மைதானத்தில் அவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, தமிம் இக்பால் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான டாக்கா பிரீமியர் லீக் தொடரில் சவாரில் நடைபெற்ற ஷைனேபுகுர் கிரிக்கெட் கிளப் அணிக்கெதிரான ஆட்டத்தில் முகமதியன் ஸ்போர்ட்டிங் கிளப் அணியின் கேப்டனாக நேற்று களமிறங்கினார்.
அப்போது, களத்தில் ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்த தமிம் இக்பாலுக்கு மார்பில் அசௌகரியம் ஏற்படவே அங்கிருந்த மருத்துவக்குழு அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

பின்னர், மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த பிறகுதான், அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, தமனியில் அடைப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து ஆஞ்சியோகிராம் (Angiogram), ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) செயல்முறை மேற்கொண்ட பிறகு அவர் சுயநினைவுக்குத் திரும்பினார்.
இது குறித்து பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவ நிபுணர் தேபாஷிஷ் சவுத்ரி, ``தமிம் இக்பால் முதலில் நெஞ்சில் வலி இருப்பதாகத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டு ஈசிஜி (ECG) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், ரத்தப் பரிசோதனையில் அவருக்கு பிரச்னை இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, மீண்டும் தான் அசௌகரியமாக உணர்வதாகவும், தலைநகர் டாக்காவுக்கு செல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை ஏற்றிச் சென்றபோது அவருக்கு மீண்டும் நெஞ்சில் வலி ஏற்பட்டது. இரண்டாவது முறையாக மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதுதான் அவருக்குப் பெரிய அளவில் மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. தற்போது அவர் ஃபாசிலதுன்னேசா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்" என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, அறிக்கை வெளியிட்ட வங்கதேச கிரிக்கெட் வாரியம், ``அவரின் உடல்நிலையை கிரிக்கெட் வாரியம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மருத்துவக் குழுவுடன் தொடர்பில் இருக்கிறோம். அவரின் உடல்நிலை பூரணமாகக் குணமடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உறுதியாக இருக்கிறோம்." தெரிவித்தது.
இந்த நிலையில் தனியார் ஊடகத்திடம் பேசிய வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் ஹபிபுல் பஷார், ``தமிம் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார். அவருக்கு மிகுந்த கவனத்துடன் சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.
வங்கதேச அணிக்காக 70 டெஸ்ட், 243 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் தமிம் இக்பால் மொத்தமாக 25 சதங்கள், 94 அரைசதங்கள் உட்பட 15,249 ரன்களைக் குவித்திருக்கிறார். இவர், இந்த ஆண்டு ஜனவரியில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.