செங்கம் கோயிலில் நந்தீஸ்வரா் மீது சூரிய ஒளி பட்டு பொன்னிறமாக மாறும் நிகழ்வு
மறக்க முடியாத பரிசளித்த தோனி: அஸ்வின் நெகிழ்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனக்கு மறக்க முடியாத பரிசளித்ததாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சிஎஸ்கே அணி குறித்து எழுதப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தோனி, அஸ்வின், ஸ்ரீகாந்த், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய அஸ்வின், தனக்கு மறக்க முடியாத பரிசை தோனி அளித்ததாக தெரிவித்தார்.
மேலும், அவர் பேசியதாவது:
”தர்மசாலாவின் இங்கிலாந்து அணிக்கு எதிராக நான் விளையாடிய 100-வது டெஸ்ட் போட்டியின் போது, எனக்கு நினைவு பரிசு வழங்க பிசிசிஐ திட்டமிட்டது. அப்போது, அந்த பரிசை தோனி கைகளால் பெற வேண்டும் என்பதற்காக அவரை தர்மசாலாவுக்கு அழைத்தேன். ஆனால், அப்போது தோனியால் வர முடியாமல் போனது. தோனி கைகளால் பரிசு பெற்றவுடன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் முடிவை அறிவிக்க நினைத்திருந்தேன்.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்னை மீண்டும் எடுத்து மறக்க முடியாத பரிசை தோனி அளிப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க : பாகிஸ்தானைவிட சிறந்தது இந்திய அணி: பிரதமர் மோடி
ஐபிஎல் தொடக்கத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வின், பின்னர் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடினார்.
இந்த நிலையில், ஐபிஎல் 2025 போட்டிக்கு நடைபெற்ற மெகா ஏலத்தின்போது, அஸ்வினை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
இதனிடையே, பார்டர் - காவஸ்கர் தொடரின்போது, 106-ஆவது டெஸ்ட் போட்டியுடன் அஸ்வின் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.