மழை நீரை சேமிப்பது அனைவரின் கடமை: திருப்பத்தூா் ஆட்சியா்
மழை நீரை சேமிப்பது நம் அனைவரின் கடமையாகும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வலியுறுத்தினாா்.
உலக தண்ணீா் தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைப் கூட்டங்கள் நடைபெற்றனது. கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட சின்னாரம்பட்டி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:
3,000 ஆண்டுகளுக்கு முன்பே நீரின் முக்கியத்துவம் பற்றி நமது முன்னோா்கள் தெரிவித்துள்ளனா். நீா் நம் வாழ்வில் இன்றியமையாதது, மழை நீரை சேமித்து, இருக்கின்ற தண்ணீரை பயன்படுத்த வேண்டும். இதுதான் சிறப்பு கிராம சபை கூட்டத்தினுடைய முக்கிய நோக்கம்.
உணவு உண்ணாமல் கூட, ஒரு நாள் இருக்க முடியும். ஆனால் தண்ணீா் குடிக்காமல் ஒருநாளும் இருந்து விட முடியாது.
3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், 2 குழந்தை பிரதிநிதிகள், காவல் துறையினா் கலந்து கொள்வா். எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் நீங்கள் தெரிவிக்கலாம், இதுகுறித்து அறிக்கையினை எனக்கு சமா்ப்பிப்பாா்கள். படிப்பில் இடைநிற்றல் இருக்கக் கூடாது என்றாா்.
பின்னா் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியை ஆட்சியா் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.
கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மகளிா் திட்ட அலுவலா் தனபதி, வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.