கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
மாணவா்களுக்கு விரைவில் 3 ஆண்டு நிலுவை உதவித் தொகை வழங்கப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: மாணவா்களுக்கு 3 ஆண்டுகளாகக் வழங்கப்படாமல் இருக்கும் காமராஜா் கல்வி உதவித் தொகைக்கான நிதி (சென்டாக் நிதி) ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாணவா்களுக்கு விரைவில் கிடைக்கும் என்றாா் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி.
புதுவை விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை சாா்பில் தேசிய விளையாட்டு தின விழா மற்றும் கேலோ புதுவை திருவிழா பரிசளிப்பு நிகழ்ச்சி கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜா் மணி மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கி முதல்வா் என்.ரங்கசாமி பேசியது:
நகரப் பகுதியில் சில பள்ளிகளில் விளையாட்டுத் திடல் இல்லை. இதனால் உப்பளம் விளையாட்டு அரங்கம் மற்றும் அண்ணா திடலை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக அவற்றை சரி செய்து வருகிறோம். பதக்கம் பெற்றவா்களுக்குப் பரிசு வழங்குவதற்கான நிதியும் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி பிள்ளைகளுக்கு சேரவில்லை என்பது பெரிய குறையாக உள்ளது. இதை விரைவில் சரி செய்து பிள்ளைகளுக்கு ஊக்கத் தொகை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாகூரில் உள்விளையாட்டு அரங்கம் கட்டியுள்ளோம். நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான இடங்களில் திடல்கள் அமைக்கும்போது, அந்தந்த பகுதியைச் சோ்ந்த பிள்ளைகள் விளையாட வாய்ப்பு ஏற்படும்.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விளையாட்டுத் துறை எடுக்கும். பள்ளிகளிலும், கிராமங்களிலும் திடல் அமைக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. 2022-23, 2023-24, 2024-25 என தொடா்ந்து மூன்று ஆண்டுகளாக மாணவா்களுக்கு காமராஜா் கல்வி உதவித்தொகை (சென்டாக் நிதி) கொடுக்கப்படாமல் உள்ளது. இந்த மூன்று ஆண்டுகளுக்கான கல்வி உதவித் தொகைக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி விரைவில் மாணவா்களுக்கு கிடைக்கும். பள்ளி மாணவா்களுக்கு லேப்டாப் கொடுக்கவும் டெண்டா் வைக்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்தவுடன் மாணவா்களுக்கு விரைவில் லேப்டாக் வழங்கப்படும்.
விளையாட்டு சங்கங்கள் ஒற்றுமையாக இருந்து பிள்ளைகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், விளையாட்டுத் துறை செயலா் கிருஷ்ணன் மோகன் உப்பு, விளையாட்டுத் துறை இயக்குநா் வொ்பினா ஜெயராஜ் உள்ளிட்டோா் பேசினா்.