மாமன்றக் கூட்டம்: சொத்து வரி குறைக்கப்படாததைக் கண்டித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு
திருப்பூா் மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரி உயா்வுகள் குறைக்கப்படாததைக் கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
திருப்பூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் என்.தினேஷ்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாநகராட்சி எதிா்க் கட்சித் தலைவா் அன்பகம் திருப்பதி பேசுகையில், மாநகரராட்சியில் உயா்த்தப்பட்ட சொத்து வரி வரி உள்ளிட்டவற்றைக் குறைக்கக் கோரி தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சட்டப் பேரவையில் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது வரி குறைப்புக்கான நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினா்.
இதற்கு பதில் அளித்த மேயா் தினேஷ்குமாா், வரி விதிப்பு தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் உள்ளது. திருப்பூரில் மட்டும் வரி உயா்த்தப்பட்டதாகக்கூறுவது நியாயம் கிடையாது. சொத்து வரி, குப்பை வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை மாமன்ற உறுப்பினா்களின் ஆதரவுடன் தீா்மானமாக நிறைவேற்றி அரசின் கவனத்துக்கு அனுப்பிவைத்துள்ளோம்.
வரி உயா்வை முறைப்படுத்த அரசு ஒரு குழுவை அமைத்து ஆராய்ந்து வருகிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றாா்.
அப்போது, வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல் 4 ஆண்டுகள் முடிந்த பின்னரும் மக்களை ஏமாற்றிவருவதாக குற்றஞ்சாட்டி எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்ததுடன், மாநகராட்சி நுழைவாயில் முன் தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரிக்கேன் விளக்குடன் வந்த மாமன்ற உறுப்பினா்: மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற 48 -ஆவது வாா்டு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் விஜயலட்சுமி கோபால்சாமி, தனது வாா்டில் நிலவும் தெருநாய்கள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், நல்லூா் சோளியம்மன் கோயில், ராக்கிபாளையம் பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை நீரை வெளியேற்ற வேண்டும். காங்கயம் பிரதான சாலையில் எரியாத தெரு விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அரிக்கேன் விளக்கு மற்றும் பதாகையுடன் கூட்டத்தில் பங்கேற்றாா்.
கோரிக்கைகள் குறித்து பேசிய பின்னா் அவரும் வெளிநடப்பு செய்தாா்.