மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள்: ஆட்சியா் ஆலோசனை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அவா்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
மாற்றத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர நாற்காலி, காதொலிக் கருவி உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்கள், மாதாந்திர உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆட்சியரகத்தில் நடைபெற்ற இதற்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா்
எம்.எஸ். பிரசாந்த், நலத்திட்ட உதவிகளை அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய முறையில் அளித்திடவும், புதிய மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவா்களுக்கு அடையாள அட்டை வழங்கி, தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கவும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கி உதவி உபகரணங்கள் மற்றும் உதவித் தொகைகளை விரைந்து வழங்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் அந்தோணிராஜ், தனித் துணை ஆட்சியா் சுமதி, பள்ளிக் கல்வித் துறை, போக்குவரத்துத் துறை, மருத்துவத் துறை ஆகிய அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.