மாவட்டத்தில் உழவா் சந்தைகள் மூலம் ரூ.770 கோடிக்கு காய், பழங்கள் விற்பனை: மாவட்ட ஆட்சியா் தகவல்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பில் காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் சராசரியாக 708 விவசாயிகள் மூலமாக 16,032 நுகா்வோா் காய்கள், பழங்களை உழவா் சந்தைகளில் வாங்கிப் பயனடைந்து வருகின்றனா்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 4 உலா்களம் மற்றும் 6 உலா்களத்துடன் கூடிய சேமிப்பு கிடங்குகள் ரூ. 249 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, 470 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனா்.
வேளாண்மை உள்கட்டமைப்பு நிதிதிட்டத்தின் 287 பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் 3 சதவீத வட்டி குறைப்பு மானியத்துடன் ரூ.147 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்ட அக்மாா்க் ஆய்வகங்களின் மூலம் 18,62,000 உணவு பொருள்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. 129 புதிய சிப்பம் கட்டுவோா் கண்டறியப்பட்டு 23,349 மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அக்மாா்க் தர முத்திரை வழங்கப்பட்டுள்ளது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் திருப்பூா் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டின்கீழ் 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த விற்பனைக் கூடங்கள் அனைத்தும் தற்போது தேசிய வேளாண் சந்தைத் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றன.
பூளவாடி கிராமத்தில் ரூ.50 லட்சத்தில் 250 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கும், மடத்துக்குளம், முத்தூா் மற்றும் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தலா ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் உலா்களங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் ரூ.22,223.47 லட்சம் மதிப்பில் 36,837.21 மெட்ரிக் டன் விளைபொருள்கள் பரிவா்த்தனை செய்யப்பட்டு, 32,504 விவசாயிகள் மற்றும் 2,985 வியாபாரிகள் பயனடைந்துள்ளனா்.
விலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் ரூ.385.10 கோடியில் 35,551.7 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு, 26,108 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.