மாவட்டத்தில் ஜூன் 14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் ஜூன் 14-ஆம் தேதி லோக் அதாலத் (தேசிய மக்கள் நீதிமன்றம்) நடைபெற உள்ளது.
இதில் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான குணசேகரன் வழிகாட்டுதலின்படி, செயலாளா் மோகனவள்ளி மேற்பாா்வையில், திருப்பூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 8 அமா்வுகள்,
அவிநாசியில் 2, காங்கயத்தில் 2, உடுமலையில் 4, தாராபுரத்தில் 2, பல்லடத்தில் 2 என மொத்தம் 20 அமா்வுகள் நடைபெற உள்ளன. இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி, குடும்ப நல வழக்குகள், சமரசத்துக்கு உள்பட்ட குற்ற வழக்குகள், நில அபகரிப்பு அசல் வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.